பிப்ரவரி 1908ல், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோர் மீது, ராஜ துரோக வழக்கு சுமத்தப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டனர். அச்சமயத்தில், திருநெல்வேலி சென்று, வ.உ.சி.,யையும், சிவாவையும் சிறையில் சந்தித்துப் பேசினார் பாரதியார். இது சம்பந்தமாக, ஜூலை 2, 1908ல் வெளியான, தன், ‘இந்தியா’ பத்திரிகையில் அவர் எழுதியது:திங்கட்கிழமை காலை, பாளையங்கோட்டை ஜெயிலுக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்குள்ள அதிகாரிகள் அனுமதியின் பேரில் உள்ளே சென்று, ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை, ஸ்ரீ சுப்ரமணிய சிவா இருவரையும் கண்டு பேசினேன். ஸ்ரீ சிதம்பரம் பிள்ளையை, முன்பு நான் தூத்துக்குடியில், அவருடைய அரிய பிரசங்கங்களை ஆயிரக்கணக்கான ஜனங்கள் கேட்டு, புகழ்ச்சி கூறிக் கொண்டிருந்த காலத்தில் பார்க்கையில், அவருடைய முகம் எவ்வளவு பிரசன்னமாகவும், தேஜசுடனும் விளங்கியதோ, அதே மாதிரியே இப்போதும் இருக்கக் கண்டேன்.ஸ்ரீ சிவாவும் சந்தோஷமாகத் தான் இருந்தார். ஆனால், அவர் தாடி, மீசையை எடுத்துவிட்ட படியால், முகம் சிறிது மாறுபாடாகத் தெரிந்தது. ஸ்ரீமான் பிள்ளையும், சிவாவும், தங்களுடைய சொந்த காரியங் களைப் பற்றி மட்டுமே என்னோடு வார்த்தையாடாமல், உலகப் பொது விஷயங்களைப் பற்றி, வெகு உல்லாசமாகப் பேசிக் கொண்டிருந்தனர்! “சிவாவின் முகம், சிறிது மாறுபாடாகத் தெரிந்தது…” என்று பாரதியார் குறிப்பிட்டதை, சிதம்பரனார் சற்று விளக்கமாகவே, தன் சுயசரிதைப் பாடலிலே, பின்வருமாறு நகைச்சுவையாக விவரித்துள்ளார். “தாடியை யெடுத்திடச் சாற்றிய சிவம் தான், ‘வாடி’ என்றிடு வண்ணம்…” என்று. அதாவது, ‘வாடி’ என்று அழைக்கத் தோன்றும் விதத்தில், பெண் போன்ற தோற்றத்தில் சிவா காட்சி அளித்தார்.
***
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், ஜில்லா போர்டு தேர்தலுக்கு பிரசாரம் செய்வதற்காக, என் கல்லூரி நண்பருடன் திருவண்ணாமலைப் பகுதிக்குச் சென்றிருந்தேன். ஒரு நாள் மாலை, சுற்றுப்பயணம் தொடங்கியது. கடைசிக் கூட்டம் நடக்கும் போது, இரவு 12 மணிக்கு மேலிருக்கும். ஒரு கிராமத்தில் நடைபெற்றக் கூட்டத்தில், கூட்டத்திற்கு வருகை தந்திருந்த மக்கள் பாதி தூக்கத்தில் இருந்தனர். நான் அவர்களைப் பார்த்து பேசிய போது சொன்னேன், “நீங்கள் எல்லாம் பாதி தூக்கத்தில் இருக்கிறீர்கள். உங்கள் தூக்கத்தை கெடுப்பதற்கு மன்னிக்க வேண்டும். பாதி தூக்கத்தில் நீங்கள் இருக்கிற நிலையில், உங்களிடையே அதிகம் பேசுவது சரியா என்று யோசிக்கிறேன்…’ என்னோடு வந்த கல்லூரி நண்பர், மேடைப் பேச்சு பழக வேண்டுமென்று வந்தவர். அவர் நண்பர் ஒருவர், “அண்ணாதுரை, என்னென்ன பேசுகிறார் என்று குறித்து வைத்துக் கொள். மறு கூட்டத்தில் அப்படியே பேசு…” என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார். அதை, அந்த நண்பர் அப்படியே பின்பற்றி, மறுநாள் மாலை ஆறு மணிக்குக் கூட்டம் நடக்கும் போது, அந்தக் கூட்டத்தில் முதல் நாள் இரவு ஒரு மணிக்கு நான் பேசியதையே பேசியுள்ளார்.”நீங்கள் எல்லாம் பாதி தூக்கத்தில் இருக்கிறீர்கள். உங்கள் தூக்கத்தைக் கெடுப்பதற்கு மன்னிக்க வேண்டும்…” என்று பேசினாராம். நான் பேசிய போது மக்கள் எவ்வளவு உருக்கம் அடைந்தனரோ, அவ்வளவு உருக்கம் கிடைக்கவில்லையே என்று, திரும்பி வந்த அந்த நண்பர் கேட்டார். மக்கள் கேலியாக வேறு சிரித்தனர் என்று வருந்தினார். அதைப் போல், கனம் உறுப்பினர்கள் நான் சொன்னதை எந்த நேரத்தில், எந்தச் சூழ்நிலையில் சொன்னேன் என்பதை அறியாமல், மேற்கோள் காட்டிப் பேசினர். அது தவறு என்று சுட்டிக் காட்டுகிறேன்!
— முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சட்டசபையில் கூறியது.
article source: Dinamalar







