திண்ணை 20.03.2011

கடந்த, 1957ல் நடந்த தேர்தலில், கண்ணதாசன் செட்டி நாட்டில் தன் ஊர் இருந்த திருக்கோஷ்டியூர் சட்டசபைத் தொகுதியில், தி.மு.க., வேட்பாளராகப் போட்டியிட்ட போது, அவருக்கு, அவரது சமூகத்திலிருந்தே ஒரு பிரச்னை எழுந்தது.அதாவது, நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தில் ஒரு பழக்கம் இருந்தது. தேர்தல் நேரத்தில், நகரத்தார் தங்களுக்கெனத் தனியாக ஒரு கூட்டம் போடுவர். போட்டியிடும் தங்கள் ஜாதி வேட்பாளர்களை அழைத்து, அதில் பேச சொல்வர்.அப்படி ஓட்டு கேட்க வேண்டியவர் யாராக இருந்தாலும், சபையின் முன்னே, கீழே விழுந்து வணங்கி, தங்களுக்காக ஓட்டளிக்கும்படி வேண்டுகோள் விடுக்க வேண்டும். செட்டிநாட்டு அரசர் ராஜா சர்.முத்தையா செட்டியார் கூட, அப்படித்தான் செய்தார். ஆனால், யாருக்கும் தலை வணங்காத கவிஞர் கண்ணதாசன், இந்த விஷயத்திலும் வணங்கா முடியாக நின்றார். கீழே விழுந்து கும்பிட மறுத்து விட்டார்.நகரத்தார் ஓட்டு தனக்குக் கிடைக்காது என்ற எண்ணம் வந்தபோது, மேலும் ஒரு தவறைச் செய்தார். நாட்டுக்கோட்டை நகரத்தாரையே கடுமையாகத் தாக்கி, கூட்டங்களில் பேசினார். இதன் விளைவாக, அவருக்குக் கிடைக்கவிருந்த ஓட்டுக்களும், கிட்டாமல் போய் விட்டன.

— கண்ணதாசன் நினைவுகள் நூலிலிருந்து…

***

பர்மியர்களுக்குக் கடவுளிடத்தில் இருக்கும் பக்தியை விட, துறவியரிடத்தில் இருக்கும் பக்தி அதிகம். பெரிய கோவிலில் எங்கும் புத்த பிட்சுகள் உலவிக் கொண்டிருக்கின்றனர்.
புத்த முனிவர்களை, “பொங்கி கள்” என்று சொல்கின்றனர். மஞ்சள் நிறமுள்ள நீண்ட ஆடையை அணிகின்றனர். தலையை மழித்துக் கொள்கின்றனர்.சின்னஞ்சிறிய பையன், பத்து வயது இருக்கும். தலை மொட்டையாக, பிட்சுகளுக்குரிய ஆடையுடன் நடந்து வந்தான். அவன், “துறவி” என்று, என்னால் நம்ப முடியவில்லை.
“இந்த பையனுக்கு இந்த வேஷம் போட்டிருக்கின்றனரே… ஏன்?” என்று கேட்டேன். “இவன் ஒரு பொங்கி” என்று கூறினர். “ஐயோ, பாவம்… இந்த பிராயத்தில் உலகைத் துறந்து விட்டானே… பருவம் முதிர, முதிர இவன் தன் துறவொழுக்கத்தை இறுதி வரை கொண்டு செலுத்த வேண்டுமே!” என்றேன்; நண்பர்கள் சிரித்தனர். பிறகு, உண்மை தெரிந்தது.
பர்மிய குடும்பத்தில், மூத்த மகன் துறவியாக வேண்டுமாம். துறவியாவதென்றால், அஞ்ச வேண்டியதில்லை. வாழ்நாள் முழுவதும் துறவியாக இருக்க வேண்டும் என்ற வரையறை இல்லை. மொட்டைத் தலை, மஞ்சள் உடை, பிட்சா பாத்திரம் இவற்றைத் தாங்கினால், யாரும் பிட்சு ஆகிவிடலாம். சில மாதங்களோ, சில நாட்களோ பிட்சுவாக இருந்து, மறுபடியும் பழைய வாழ்க்கைக்கு வந்து விடலாம்.
துறவுக் கோலம் பூண்டவன், எந்த பருவத்தினன் ஆயினும், வீட்டில் தங்க மாட்டான்; மடத்தில்தான் தங்குவான். பொங்கியைக் கண்டால், யாவரும் வணங்குகின்றனர். தாம் பெற்ற பிள்ளை பொங்கியானால், தந்தையும், தாயும் அவனை வணங்குகின்றனர். பொங்கி எப்போதும் கையில் பிட்சா பாத்திரம் வைத்திருக்கிறான். பிச்சை வாங்கித்தான் உண்ண வேண்டும். அவர்கள் வாங்குவது பிச்சையா? பொங்கிகளுக்கு, அறுசுவை உண்டியும், அளிக்கின்றனர் மக்கள். அவர்களை எங்கே கண்டாலும் ஆண்களும், பெண்களும் வணங்குகின்றனர்.
பொங்கியாக இருப்பவர், அந்த கோலத்தில் இருக்கும் வரை, தீய செயல் எதுவும் செய்வதில்லை. ஒரு நண்பர் இதை வேடிக்கையாக, “யாரையாவது, உதைக்க வேண்டும், கொல்ல வேண்டுமென்று ஒரு பொங்கி நினைத்தால், அவன் தன் ஆடைகளைக் களைந்து எறிந்துவிட்டு, வேறு ஆடை அணிந்து, கையில் கத்தியை எடுத்துக் கொள்வான்…” என்று கூறினார்.
— பர்மியப் பயணக் கட்டுரையில், கி.வா.ஜகந்நாதன்.

 

ARTICLE SOURCE: DINAMALAR

பார்த்தது..கேட்டது..படித்தது 20.03.2011

அன்றைய மீட்டிங்கில்… “ஆடும் வரை ஆட்டம்… ஆயிரத்தில் நாட்டம்…” என்ற கண்ணதாசனின் பாட்டைப் பாடிக் கொண்டிருந்தார் பெரியசாமி அண்ணாச்சி… அந்த நேரத்தில், “சேடப்பட்டியார்” என அன்புடன் நண்பர்களால் அழைக்கப்படும் நண்பர், தாம் வாங்கிய புதுக்காருடன் வந்து சேர்ந்தார்.மத்யஸ்தம் செய்வதிலும், சபையை சுமூகமாக நடத்திச் செல்வதிலும் திறமை கொண்டவர் என்பதால், “சேடப்பட்டியார்” என்ற காரணப் பெயர், முந்திய, “அம்மா” ஆட்சி காலத்தில், அந்த நண்பருடன் ஒட்டிக் கொண்டது.
“வாங்க… வாங்க… சேடப்பட்டியாரே…” என தம், “டிரேட் மார்க்” கட கட சிரிப்புடன், அவரை வரவேற்றார் அண்ணாச்சி, “இது என்ன சார்… பெட்ரோலா, டீசலா, உள்நாட்டுத் தயாரிப்பா, வெளிநாட்டுக்காரா?” என்பதையெல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டவர், “இந்தக் காருக்கு கேஸ் போட்டால் என்ன?” என, திடீர் குண்டைத் தூக்கிப் போட்டார்.
அனைவரும் அதிர்ந்து அண்ணாச்சியை நோக்க, லென்ஸ் மாமா, “ஹைகோர்ட்ல போடணுமா, சுப்ரீம் கோட்டுல போடணுமா?” எனக் கேட்டார்.”அட… நீங்க வேற கிண்டல் பண்ணாதீங்கப்பா… கேஸ்ப்பா… அதான் கேஸ்… சிலிண்டருல வருமுல்லா… அந்த கேஸ்…” என விளக்கம் கொடுத்து, “கேஸ் போட்டா செலவு கம்மி தான…” என்றார் அப்பாவியாக…
“அண்ணாச்சி… இங்கிலீஷை விட்டு ஒழியுங்கன்னு எத்தனை முறை சொல்றது உங்கள்ட்ட… அது கேஸ் இல்லே காஸ்…” என விளக்கம் கொடுத்தார் லென்ஸ் மாமா…”ஓஹோ… கேஸ்ன்னா இங்கிலீஷா… சரியா போச்சுப்பா… நா தமிள்ன்னுல்லா நெனச்சுக்கிட்டுக் கெடக்கேம்…” எனக் கூறி, கட கடவென சிரித்தார்.”அசாம் எந்த நாட்டுல இருக்கு எனக் கேள்வி கேட்டவர் நம்ம அண்ணாச்சி… அவரு கையில ரொம்ப வெச்சுக்காதே பா…” என இடையில் புகுந்தார் அன்வர் பாய்.நம் பாரத முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி ஒரு செய்தி சொல்லட்டுமா என்றார் குப்பண்ணா. சபையோர் ஒட்டு மொத்தமாக குப்பண்ணா பக்கம் திரும்ப, “புளிச்” என வெற்றிலையைத் துப்பி, சுற்றுப்புறத்தை அசிங்கம் செய்து, சொல்ல ஆரம்பித்தார்…வாஜ்பாய், உத்திரபிரதேசத்துல, கான்பூர் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். அப்போ என்னாச்சு தெரியுமோ… அவரோட தோப்பனார் (தந்தை) ரிட்டயர் ஆகிட்டார்… அவர், டிஸ்டிரிக்ட் எஜுகேஷன் ஆபிசரா இருந்தவர், அவ்வளவு நாள் சுறுசுறுப்பா இருந்துட்டு, திடீர்ன்னு ஓய்வு எடுக்கணும்ன்னா எப்படி… அவரால சும்மா இருக்க முடியலே…
என்ன செஞ்சார் தெரியுமோ? தன் புள்ளயோடவே, “லா காலேஜுல” சேர்ந்துட்டார். இதுலே இன்னொரு கூத்து என்ன தெரியுமோ? வாஜ்பாயோட மூத்த சகோதரர் அதே காலேஜுலே, பைனல் இயர் படிச்சுண்டு இருந்தார்…அப்பாவும், புள்ளையும் ஒரே கிளாசுலே படிச்சா, பையன்கள் சும்மா இருப்பாளோ? கிண்டல் பண்ணா… உடனே, அப்பா வேற செக்ஷனுக்கு மாத்திண்டு போயிட்டார்…
ஆரம்பத்துலே, எல்லா ஸ்டூடண்ட்சுக்கும் இருக்கற மாதிரி, வாஜ்பாய்க்கும் கம்யூனிஸ்ட் அபினிட்டி இருந்தது… அதனாலே, கம்யூனிஸ்ட் பின்னணியுள்ள ஒரு இயக்கத்துலே சேந்து, விடுதலை போராட்டத்துலே ஈடுபட்டார்… கம்யூனிஸ்ட் பின்னணி அந்த இயக்கத்துக்கு இருந்ததாலே பேரன்ட்ஸ் ரொம்ப எதிர்ப்பு தெரிவிச்சா… வாஜ்பாய் கண்டுக்கலே… பலன் : 16 வயசுலே ஜெயில் வாசம் அனுபவிச்சார்.
காலேஜ் படிப்பு முடிஞ்சதும், பெட்டி, படுக்கையோட டில்லிக்குப் போய் சேர்ந்தார் வாஜ்பாய்.அங்க போய், “வீர் அர்ஜுன்” என்ற தினப் பத்திரிகையையும், “பாஞ்ச சைன்யா” என்ற வாரப் பத்திரிகையையும் துவங்கி நடத்தினார். ஒரு எழுத்தாளரா… மணி உன்னைப் போல தான் வாழ்க்கையைத் துவங்கினார்.ஒரு தடவை காந்தியை சந்திக்கப் போனார். அப்போ, அங்கிருந்த, காந்தியோட மனைவி, கஸ்தூரிபா அம்மையார், வாஜ்பாயாண்டே என்ன சொன்னாங்களாம் தெரியுமா?
“அம்பி… இனிமே நீ வரும்போது, கதர் ஆடை போட்டுண்டு வா… அப்போ தான் பாபுஜி (காந்தி) சந்தோஷப்படுவார்!”ன்னாங்களாம்! அன்னிக்கு கதர் ஆடை போட ஆரம்பிச்சுது தான்… இன்னி வரை தொடர்ந்து கதர் தான் போடறார் வாஜ்பாய்.இன்னொரு முக்கியமான செய்தி தெரியுமோ?
கவிஞர், மேடைப் பேச்சாளர்ங்கற தகுதிகளோட, சமையல் கலையிலும் அவர் எக்ஸ்பர்ட் ஆக்கும்… சைனீஸ் உணவு வகைன்னா அவருக்கு உயிர்… அதையும், அவரே சமைச்சு குடுத்தா, தேவாமிர்தமா இருக்குமாம்…
— என்று, அண்ணாச்சிக்கும், மற்றவர்களுக்கும், வாஜ்பாய் பற்றி அறியாத செய்திகளைக் கூறினார் குப்பண்ணா…”அப்போ சைனீஸ் ரெஸ்டரண்டுல போயி, “வாண்டான் சூப்” ஒண்ணு அடிச்சிட்டு, நூடுல்ஸ் சாப்பிடலாம் வாங்க…” என நண்பர் கூப்பிட, சபையோர் காலி கிளாஸ்களை கழுவி, பத்திரப்படுத்தி கிளம்பினர்…நான் பஸ்சைப் பிடித்தேன் எதிர் திசையில் செல்ல!

***

ARTICLE SOURCE: DINAMALAR

திண்ணை 13.03.2011

நான், “பொம்மலாட்டம்” என்ற திரைப்படத்தை, 1969ல், இயக்கி, தயாரித்துக் கொண்டிருந்தேன். இப்படத்தில் ஜெயலலிதா, ஜெய்சங்கர் நடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் ஆடிப்பாடி நடிக்கும், டூயட் காட்சி ஒன்றைப் படமாக்கினேன். அதை, ஜெயலலிதாவுக்கு போட்டுக் காட்டினேன். முதலில், காட்சியைக் கண்டு மகிழ்ந்த அவர், இரண்டு நாட்களுக்குப் பிறகு என்னை போனில் அழைத்தார்.”அந்த காட்சியை மறுபடியும், “ரீ-டேக்” செய்து விடுங்கள்…” என்றார். “ஏன்?” என்று கேட்டேன். “என் உடை எனக்குப் பிடிக்கவில்லை. வேறு உடையில் நான் அதில் நடிக்க விரும்புகிறேன்…” என்றார். எனக்கு அதனால் கூடுதல் செலவு ஆகும். இருந்தும் நான், “சரி” என்றேன். ஜெய்சங்கரிடமும் கால்ஷீட் வாங்கி விட்டேன்.”அந்த காட்சியின் டான்ஸ் மாஸ்டர் தங்கப்பன், ஊரில் இல்லை. ஜெயலலிதாவிடம் அதைக் கூறினேன். அவர், ”பரவாயில்லை… தங்கப்பன் மாஸ்டரோடு ஒரு இளைஞர் உதவியாளராகப் பணியாற்றினாரே… அவரை வைத்து படமாக் கலாம்…” என்று கூறினார். அந்த உதவி டான்ஸ் மாஸ்டர் வேறு யாருமல்ல நடிகர் கமல்ஹாசன் தான்.”அவர், அப்போது டான்ஸ் அசிஸ்டென்டாக தங்கப்பன் மாஸ்டரிடம் பணியாற்றிக் கொண்டி ருந்தார். அவர் வந்து ஆடிக் காட்ட, ஜெயலலிதா, ஜெய்சங்கரை நடிக்க வைத்து, அந்த காட்சியை மீண்டும் படமாக்கினேன். ஜெயலலிதா திருப்தியடைந்தார்!

— இயக்குனர் முக்தா சீனிவாசன், ஒரு கட்டுரையில்…

***

ஈ.வெ.ரா.,வைத் தலைவராக்கிய ராஜாஜி, “என்னை முழுக்க முழுக்க சமுதாயத் தொண்டனாக்கி, காங்கிரசில் ஈடுபடுத்தி, தலைவர் நாயக்கர் என்று தாமும் அழைத்து, பிறரையும் அழைக்கச் செய்த பெருமை அவரையே சாரும். நாங்கள் நாலைந்து ஆண்டுகள் இரண்டறக் கலந்து நண்பர்களாக இருந்தோம்…” என, ராஜாஜி மறைந்த போது, “விடுதலை” தலையங்கத்தில் ஈ.வெ.ரா., குறிப்பிட்டிருந்தார். தலைவர் பதவிக்கு ஈ.வெ.ரா.,வை அமர்த்திய சம்பவம், 1923ல் நடந்தது.தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு, ஈ.வெ.ரா., பெயரை ராஜாஜி முன் மொழிந்தார். ராஜாஜியால் முன்மொழியப்பட்ட காரணத்தால், எதிர்தரப்பு வேட்பாளர் வெற்றி பெற முடியவில்லை. ஆகவே, தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என, ஒரு சிலர் குற்றம் சாட்டினார்.முறையாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அந்த உறுப்பினர்களைக் கொண்ட முதல் கூட்டம், டிச., 2, 1923ல் திருச்சியில் நடந்தது. கூட்டத் தில், எஸ்.சீனிவாச ஐயங்கார், சிங்காரவேலு செட்டியார், ஈ.வெ.ரா., சி.ராஜகோபாலாச்சாரியார், டி.எஸ்.எஸ்.ராஜன், திரு.வி.க., சத்திய மூர்த்தி, வ.வே.சு.ஐயர் போன்ற முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக, தலைவர் பதவிக்கு, சீனிவாச ஐயங்கார், திரு.வி.க., டாக்டர் வரதராஜலு நாயுடு ஆகியவர்களின் பெயர்கள் முன்மொழியப் பட்டு, இறுதியில் ஈ.வெ.ரா., நாயக்கருக்கும், ஜனாப் யாகூப் ஹசன் சேட்டுக்கும் போட்டி யிருந்தது.முதலில், ஈ.வெ.ரா., நாயக் கரின் பெயர் ஓட்டுக்கு விடப்பட்டது. அவருடைய பெயரைச் சொல்லும் போது, சி.ராஜகோபாலாச் சாரியார் முன்மொழிந்த ஸ்ரீமான் ராமசாமி நாயக்கருக்கு ஓட்டு போடுபவர்கள் கையைத் தூக்குங்கள் என, உப தலைவர் டி.எஸ்.எஸ்.ராஜன் சொன் னார். அவருக்கு நூற்றுக்கும் மேற் பட்ட ஓட்டுக்கள் கிடைத்தன. யாகூப் ஹசன் சேட்டுக்கு, 20 ஓட்டுகள் கிடைத்தன.இப்படி நடந்தது, ஸ்ரீமான் ராஜகோபாலாச் சாரியாரின் சூழ்ச்சி என, முஸ்லிம் உறுப்பினர்கள் ஆட்சேபித்தனர். சிலர், பகிரங்கமாக அறிக்கை விட்டனர்.அக்காலத்தில் நிலவிய காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி சண்டையை இச்செய்திகள் வெளிச்சம் போட்டுக் காட்டினாலும், ராஜாஜிக்கும் ஈ.வெ.ரா.,வுக்கும் இடையே இருந்த பிணைப்பை இச்செய்திகள் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம்.ஈ.வெ.ரா.,வின் துணைவியார் நாகம் மையார் தான், தமிழகத்தில் இருந்து, அகில இந்திய காங்கிரசுக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் பெண்மணி.

— டிச., 25, 1993ல், வே.ஆணைமுத்து வெளியிட்ட ஈ.வெ.ரா.,வின், 115வது பிறந்ததாள் மலரில், ராஜாஜி, ஈ.வெ.ரா., டி.எஸ்.எஸ்.ராஜன் ஆகிய மூவரும் இருக்கும் அரிய படமும், இந்த சுவாரசியமான தகவலும் வெளியிடப் பட்டுள்ளது.

 

ARTICLE SOURCE: DINAMALAR

பார்த்தது..கேட்டது..படித்தது 13.03.2011

லென்ஸ் மாமாவின் நண்பர் ஒருவர், அமெரிக்க அரசில் உயரதிகாரியாக பணியாற்றுகிறார். அவர், நம்மூர்க்காரர். சமீபத்தில், அவர் சென்னை வந்தபோது, லென்ஸ் மாமா அறிமுகம் செய்து வைத்தார். பொதுவான அறிமுகத்திற்குப் பிறகு, என்னுடைய சந்தேகங்களைக் கேட்க ஆரம்பித்தேன். நேரமோ மாலை 7 மணி. கடுப்பாகி விட்டார் மாமா. அமெரிக்க நண்பருடன் உற்சாக பான விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். நான், “சப்ஜெக்ட்டீவ்” ஆக பேச ஆரம்பித்ததும், “இதெல்லாம் நாளை காலைல வச்சுக்க… நாங்க வெளியே போகணும்!” என்றார்.

லென்ஸ் மாமாவை இடைமறித்த அமெரிக்க நண்பர், “மக்களுக்கு சென்றடைய வேண்டிய விஷயங்களைக் கேட்கிறார். நான் சொல்லப் போகும் உண்மைகளை இவர் எழுதினால், நம்மவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படும்… அரை மணி, ஒரு மணி நேரம் தாமதமானாலும் பரவாயில்லை!” எனக் கூற ஆரம்பித்தார்.

இந்தியர்கள், உலகின் எந்த பாகத்திற்குச் சென்றாலும் பாதிக்கப்படுகின்றனர். ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் இருந்து அடித்து விரட்டப்பட்டனர். இதே அபாயம் இன்னும் பல ஆப்ரிக்க நாடுகளிலும் உள்ளது. பியூஜி தீவில் இருந்தும் இந்தியர்கள் விரட்டப்பட்டனர். இப்போது, அமெரிக்காவில் இந்தியர்கள் மீது வெறுப்பு தோன்றி, இந்தியர்கள் மீது தாக்குதல் நடக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்? இவை தொடர வாய்ப்பு உண்டா எனக் கேட்டேன்.

அமெரிக்காவில் வாழும் இந்தியர் பலர் இன்னும் சில விஷயங்களை புரிந்து கொள்ளவில்லை. கறுப்பர்களுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்ற புரட்சி வெடித்த பின், 1964ல் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம் தான் நம்மவர்சுலபமாக அமெரிக்காவில் நுழைய வழி வகுத்துக் கொடுத்தது.ஆனால், அமெரிக்க வாழ் இந்தியர்கள், ரான்டி கிங் வழக்கை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அமெரிக்காவில் வாழும் ஆப்ரிக்க கறுப்பர் இனத்தவரை நம்மவர்கள் மதிப்பதே இல்லை. அவர்களது பூர்வீகம், கலாச்சாரம் பற்றி அக்கறை கொள்வதில்லை. அவர்களைவிட நம் மக்கள், “மைனாரிட்டி”தான். நம்மவர்கள் நடத்தும் வியாபாரங்களின் முக்கியமான வாடிக்கையாளர்களே கறுப்பர்கள் தான்.

கடந்த 1960க்கு முன், அமெரிக்காவுக்கு வந்த இந்தியர்கள் பெரும்பாலும், டாக்டர்கள், இன்ஜினியர்கள், ஆடிட்டர்கள் தான். இவர்கள் நகரின் மத்திய பகுதியில் வெள்ளையர் நடுவே வேலை பார்த்து, வேலை முடிந்ததும், வெள்ளைத் தோலர்கள் வாழும் இடங்களில் வீடு தேடி, வசிக்கின்றனர். இவை, நகரில் இருந்து, 40-50 கி.மீ., தொலைவில் உள்ள குடியிருப்புப் பகுதிகள். இவர்கள் மாலை, 7 மணிக்கு மேல் வெளியில் வருவது கிடையாது. மிகவும் பாதுகாப்பான வாழ்விற்கு பழக்கப்பட்டுப் போய் விட்டனர். ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்கள் டாக்சி டிரைவர்களாகவும், பெட்ரோல் பங்குகளிலும், ஓட்டல் சர்வர்களாகவும், சிறு பெட்டிக்கடைகள் நடத்துபவர்களாகவும் உள்ளனர்.எனவே, இவர்கள் நகரிலேயே வாழ வேண்டி உள்ளது. அதுவும், வேலை செய்வதிலும் விருப்பம் இல்லாத, குடியிலேயே பொழுதைப் போக்கும் கறுப்பர்கள், ஸ்பானியர்கள் இடையே வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நம்மவர்கள் நேரத்தைப் பற்றி கவலைப்படாமல், தினமும் 18 மணி நேரம் கூட உழைத்து முன்னேறி, நல்ல நிலையை குறுகிய காலத்தில் எட்டுவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. இதனால், அவர்களுக்கு ஆத்திரம் உண்டாகிறது. அமெரிக்க அரசின், சிவில் ரைட்ஸ் கமிஷன், “கடந்த ஆறு ஏழு வருடங்களாக, இந்தியர்கள் மீது வெறுப்பு அதிகரித்து வருகிறது!” எனக் கூறியுள்ளது. அந்த அறிக்கை மேலும் கூறுகிறது: ஏழை பாழை கறுப்பர்கள் வாழும் பகுதிகளில் தான் இந்தியர்களால் குறைந்த செலவில் கடைகள் ஆரம்பிக்க முடிகிறது. இவர்களது கடும் உழைப்பு, குறுகிய காலத்திலேயே பலன் தர ஆரம்பித்ததும், கடையைச் சுற்றி வாழும் ஏழை கறுப்பர்கள் பொறாமைப்பட ஆரம்பிக்கின்றனர். மேலும், அக்கம் பக்கம் வாழும் வேலையற்ற கறுப்பர்களுக்கு வேலை கொடுப்பதில்லை. இதுவும், அவர்களிடையே கோபத்தை அதிகப்படுத்தி வருகிறது.

ஆசிய கண்டத்தில் இருந்து அமெரிக்கா வரும் மக்களுக்கு, அமெரிக்க அரசு சலுகைகள் அளிக்கிறதோ என்ற சந்தேகத்தையும் கறுப்பர்களிடையே கிளப்பி விட்டுள்ளது.எங்கிருந்தோ வந்து நம்மிடம் வியாபாரம் செய்து கொழுக்கின்றனர். ஆனால், நமக்கு வேலை தர மறுக்கின்றனரே என்ற எண்ணம் கறுப்பர்களிடையேயும், ஸ்பானியர் மற்றும் ஏழை வெள்ளைத் தோலினரிடையேயும் பரவி வருகிறது. பிழைக்கச் செல்லும் நாடுகளில் எல்லாம் இந்தியர்களுக்கு ஏன் பிரச்னை ஏற்படுகிறது என்று பார்ப்போமா? தாம் பிழைக்கச் செல்லும் நாடுகளின் நல்லது, கெட்டதுகளில் இவர்கள் கலந்து கொள்வதே இல்லை. அந்நாட்டின் தேசிய நீரோட்டத்தில் இவர்கள் கலந்து கொள்ளாததால், அந்நாட்டு மக்களிடையே இந்தியர்களைப் பற்றிய உயர்வான மதிப்பீடு குறைந்து, சுயநலவாதிகளாகப் பார்க்கப்படுகிறோம்.

நம்மவர்கள் செல்லும் நாடுகளில் எல்லாம், நன்கு உழைத்து பெரிய வீடு, கார், தோட்டம் என சம்பாதித்து விடுகின்றனர். இதுவும் பொறாமையை கிளப்பி விடுகிறது. சம்பாதிக்கும் பணம் அனைத்தையும், ஊருக்கு அனுப்பாமல், தாம் வசிக்கும் நாட்டு மக்களுக்கும் செலவு செய்ய வேண்டும். உள்ளூர் மக்களையும் வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும். தீபாவளி, பொங்கல், இந்திய விழா என்று தமக்குள்ளே நடத்திக் கொள்வதை விட்டு, கறுப்பர்களையும், ஏழை – பாழை வெள்ளையனையும் இவ்விழாக்களுக்கு அழைக்க வேண்டும். அதேபோல, அவர்கள் நடத்தும் விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும் – அதற்கு பண உதவி செய்ய வேண்டும். முக்கியமாக, அவர்களது கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். தாம் உண்டு, தம் வேலை உண்டு என்று இந்தியர்கள் இன்னும் சுய நலத்துடன் இருந்தால் பிரச்னைதான் என முடித்தார்.உண்மை தானே…

(அமெரிக்க நண்பர் முடிக்கும் போது, இரண்டாம் ஜாம தூக்கத்தில் ஆடிக் கொண்டிருந்தார் லென்ஸ் மாமா!)

***

ஸ்டார், “டிவி” நிகழ்ச்சிகள், “போர்” எனவும், பல நிகழ்ச்சிகள் புரியவே இல்லை என்றும் பரவலாக பேசிக்கொள்கின்றனர். இது, ஓரளவு உண்மை என்றாலும், பயனுள்ள நிகழ்ச்சிகள் பல இடம் பெறத்தான் செய்கின்றன.


சமீபத்தில் ஸ்டாரில் கண்ட நிகழ்ச்சி, பால் பண்ணை நடத்துவது பற்றியது! ஸ்டார், “டிவி” நிகழ்ச்சியில், சவுதி அரேபியா நாட்டில், “அல்சபா” என்ற ஊரில் உள்ள பால் பண்ணையைப் பற்றி நிகழ்ச்சி, ஒன்று ஒளிபரப்பினர்.நம்மூரில் கடுங்கோடையில், 40 முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். இந்த, “அல்சபா”வில் எப்போதும், 55 டிகிரி செல்சியஸ் வெப்பம்தான்! 55 டிகிரி வெப்பம் என்றால் தண்ணீர் வசதி எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள்.அராபிய ஷேக் ஒருவருக்கு இங்கு பால் பண்ணை வைக்க ஆசை வந்தது. “விபரீத ஆசை… ஐந்து லிட்டர் பால் கூட கிடைக்காதே…” என நீங்களும், “அட போப்பா… பசு உயிரோடு இருக்கிறதே சந்தேகம்!” என உங்களது நண்பரும் பேசிக் கொண்டால் அது தவறு.“ஷேக்”கின் பண்ணையில் வளரும் பசுக்கள் ஒரு நாளுக்கு, 40 முதல் 45 லிட்டர் பால் கறக்கின்றன… அதுவும், 55 டிகிரி சூடு உள்ள சூழ்நிலையில்.இந்த ஸ்டேட்மென்டைக் கேட்டு, “கப்சா…” என நீங்கள் நினைக்கத் தோன்றும் அல்லது “பசுக்களை, “ஏசி” ரூம்களில் ஷேக் வளர்க்கிறார் போல இருக்கு…” என்ற முடிவுக்கு வரத் தோன்றும்.இரண்டுமே இல்லை!அந்தப் பாலைவனத்தில் பல அடி ஆழத்தில், “போர்” போட்டுத் தண்ணீர் எடுக்கிறார். இந்தத் தண்ணீரை, உயர் அழுத்தத்தில், குழாய்கள் மூலம் மாடுகள் கட்டப்பட்டுள்ள கொட்டகைகளுக்கு எடுத்துச் செல்கிறார். குழாய்கள், மேல் கூரையை ஒட்டி கூரையின் உட்புறமாகச் செல்கின்றன. கொட்டகைகளின் நான்கு புறமும் சுவர்கள் கூட இல்லை; மேல் கூரை மட்டும்தான் உள்ளது.உயர் அழுத்தத்தில் வரும் தண்ணீர் கூரையை ஒட்டி ஆங்கிளாக வைத்திருக்கும் பிரமாண்டமான காற்றாடிகளின் மீது பீச்சப்படுகிறது. பீச்சப்படும் தண்ணீர் காற்றாடியின் வேகத்தில் பூ மழை போல பசுக்களின் மீது தொடர்ச்சியாக விழுகிறது. இதனால், கொட்டகையின் உட்புறம் சூடு குறைந்து கொடைக்கானல், ஊட்டி போன்ற தட்ப வெட்பம் ஏற்படுகிறது.பாலைவனத்தில், குறைந்த செலவில் அதிக பால் பெறும், “ஷேக்”கின் திறமையைப் பாராட்டத்தான் வேண்டும்.நம்மூரை போன்ற தட்ப வெட்ப நிலை உள்ள நாடு தான் இஸ்ரேலும்.


இங்கு, 40-50 லிட்டர் கொடுக்கிறது பசுக்கள்.அறிவார்ந்த நம் பால் வளத்துறை அதிகாரிகள், குளிர் நாடுகளுக்கு மாடு பிடிக்க உல்லாசப் பயணம் மேற்கொள்வதை நிறுத்தி, இஸ்ரேலுக்கும், சவுதிக்கும் சென்று தொழில் நுட்பம் கற்று வந்து, இங்கு விவசாயிகளுக்கு இனி உதவுவது நலம்!

Article Source: DINAMALAR

திருந்தாநகரம் PART 1

நான் படிக்கும் கல்லூரியில், அன்றாடம் நடக்கும் விசயங்களை பகிர்ந்துக் கொள்வதற்கென்றே நண்பர்கள் குழாம் ஓன்று எனக்கு உள்ளது. எங்களில் பெரும்பாலானோர் சென்னை city பஸ்ஸிலேயே பயணம் செய்வதால்  மற்றவர்களை விட, இந்த சமுதாயத்தை உன்னிப்பாக கவனிக்கும் சந்தர்ப்பம் எங்களுக்கு கிடைக்கும். அப்படி நாங்கள் இருக்க நேரும் சூழ்நிலைகளை சில அதிர்ச்சியாக இருக்கும்.

அன்றாடம்  சமுதாயத்தில் நடக்கும் அவலங்களைக்  கண்டும், அதை சினிமா ஹீரோ போன்று தட்டிக்  கேட்க முடியாமல் மனதிற்குள் புழுங்கி வெறுப்படைபவர்கள் நாங்கள்.அதே வெறுப்புடனும்,வருத்தத்துடனும்   இந்த பதிவை எழுதுகிறேன்.
சில நாட்களுக்கு முன், ஒரு இனிய காலை பொழுதில், நண்பர் குழாமிடம் பேசிக்  கொண்டிருந்தபோது, நண்பர் ஒருவர் முந்தைய நாள் அவர் கண்ட காட்சி ஒன்றை வேதனையுடன் விவரித்தார்.

எப்போதும் போல மேற்கு சென்னையிலுள்ள தனது வீட்டிற்கு பஸ்சில் பயணம் செய்துக்  கொண்டிருந்தார். அங்கே மிதமான கூட்டம் தான் இருந்தது. இடிபட்டு,மிதிபட்டு பயணிக்க வேண்டிய நிலைமை அன்று இல்லை. தூங்குவோர் ஒருபுறம், iPod கேட்போர் ஒருபுறம் என உலகத்தோடு ஒட்டு இல்லாமல் அனைவரும் தத்தம் வேலைகளைச்   செய்துக்  கொண்டிருக்க, ஒரு  நாதாரி மட்டும் அவன் “வேலையை”  ஆரம்பித்தான்.
தடி மாடு போன்ற உருவமுடைய அந்த  **டு, பெண்கள் நிற்கும் திசையில் நின்றுக் கொண்டு தனது கைகளால்…..<நா கூசுகிறது>…. அப்படி ஒரு செயலை செய்து கொண்டிருந்தான். ஒருத்தரிடமே தொடர்ந்து “அந்த வேலையை”  செய்தால் மாட்டிக் கொள்வோமே என நினைத்து ஒவ்வொரு பெண்ணிடமும் கொஞ்சம் கொஞ்சமாக தனது “வேலையை” செய்தான். பாதிப்புக்கு உள்ளான பெண்கள் யாரும் இதை வெளிப்படையாக கண்டிக்காமல் சூழ்நிலைக் கைதிகளாக இருந்தனர். உலகறிவு அதிகம்  இல்லாத பள்ளி மாணவிகள் இதில் அதிகம் பாதிப்படைந்தது மிகவும் வேதனைக்குரியது. அதிர்ச்சியுடன் இதை கூறி முடித்த நண்பருடன் சேர்ந்து மற்ற அனைவரும் அதிர்ந்து இருந்தோம்.

இதற்கு முன், மேலை நாடுகளில் தொட்டதற்கெல்லாம் Child Abuse Prevention சட்டத்தை பயன்படுத்துவதை கேட்டு  எரிச்சல் அடைந்து இருக்கிறேன். ஆனால் இன்று, இது போன்ற கடுமையான சட்டங்கள் நம் நாட்டிலும் தேவை என்பதை உரக்கக்  கூறுகிறேன்.

நண்பர் குழாமில் இது போன்ற செயல்களை எதிர்காலத்தில் தடுக்க “என்ன செய்ய வேண்டும்?” என்ற கோணத்தில் பேசிக்  கொண்டு இருந்தோம்.வேறு நண்பர் ஒருவர், FRIEND OF POLICE என்ற நிலையை முறைப்படி பதிவு செய்து அடைந்தால் இது போன்ற இழி செயல்களை தட்டி கேட்கலாம் என்று ஒரு ஐடியா சொன்னார். இந்த FOP பற்றி முழுமையான திருப்திகரமான information கிடைக்காததால் பின் ஒரு  நாள் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தோம். அன்று மாலையே, எனது மேற்கு சென்னை நண்பர் ஒரு Traffic Policeஇடம் FOP பற்றிய விபரங்களை கேட்டு அந்த சம்பவத்தையும் விளக்கியுள்ளார். அனைத்தையும் பொறுமையுடன் கேட்ட Traffic Police, இது போன்ற விசயங்களை தட்டிக் கேட்காமல் அந்த Busஇல் இருந்த மற்ற ஆண்களை போல கண்டும் காணதது போல் இருக்க வேண்டும் என்றும்,அது போன்று கேவலமாக நடந்துக் கொள்பவர்களை தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும் கூறி அந்த நண்பரை சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளார்.  

இப்படி அவரவர் தத்தம் வேலைகளை மட்டுமே பார்த்துக்  கொண்டு இருந்தால், இது போன்ற அநியாயங்களை எப்படித்தான் தடுத்து நிறுத்துவது. அன்று அந்த காட்சியைக் கண்ட நண்பர் கோபத்தின் உச்சிக்கு சென்றும் ஏதும் செய்ய இயலாமல் மனதிற்குள்ளேயே வெறுப்புற்று வருந்தியதைப்    போலதான் கடைசி வரை அனைவரும் இருந்தாக வேண்டுமா? இந்த பிரச்சனைக்கு தீர்வே கிடையாதா? கார் வசதி உள்ள சிறுமிகள் தப்பித்துக் கொள்வார்கள், ஸ்கூட்டர் உள்ள பெண்கள் பிழைத்துக் கொள்வார்கள், ஆனால் பஸ்சையே சார்ந்துள்ள வெகுஜன பெண்கள், குறிப்பாக சிறுமிகளின்  கதி?
பதில் எனக்கு தெரில, கீழ comment sectionல உங்க மனசுல இருக்கறத கொட்டுங்க!
திருந்தாநகரம் தொடரும்….