
லென்ஸ் மாமாவின் நண்பர் ஒருவர், அமெரிக்க அரசில் உயரதிகாரியாக பணியாற்றுகிறார். அவர், நம்மூர்க்காரர். சமீபத்தில், அவர் சென்னை வந்தபோது, லென்ஸ் மாமா அறிமுகம் செய்து வைத்தார். பொதுவான அறிமுகத்திற்குப் பிறகு, என்னுடைய சந்தேகங்களைக் கேட்க ஆரம்பித்தேன். நேரமோ மாலை 7 மணி. கடுப்பாகி விட்டார் மாமா. அமெரிக்க நண்பருடன் உற்சாக பான விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். நான், “சப்ஜெக்ட்டீவ்” ஆக பேச ஆரம்பித்ததும், “இதெல்லாம் நாளை காலைல வச்சுக்க… நாங்க வெளியே போகணும்!” என்றார்.
லென்ஸ் மாமாவை இடைமறித்த அமெரிக்க நண்பர், “மக்களுக்கு சென்றடைய வேண்டிய விஷயங்களைக் கேட்கிறார். நான் சொல்லப் போகும் உண்மைகளை இவர் எழுதினால், நம்மவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படும்… அரை மணி, ஒரு மணி நேரம் தாமதமானாலும் பரவாயில்லை!” எனக் கூற ஆரம்பித்தார்.
இந்தியர்கள், உலகின் எந்த பாகத்திற்குச் சென்றாலும் பாதிக்கப்படுகின்றனர். ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் இருந்து அடித்து விரட்டப்பட்டனர். இதே அபாயம் இன்னும் பல ஆப்ரிக்க நாடுகளிலும் உள்ளது. பியூஜி தீவில் இருந்தும் இந்தியர்கள் விரட்டப்பட்டனர். இப்போது, அமெரிக்காவில் இந்தியர்கள் மீது வெறுப்பு தோன்றி, இந்தியர்கள் மீது தாக்குதல் நடக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்? இவை தொடர வாய்ப்பு உண்டா எனக் கேட்டேன்.
அமெரிக்காவில் வாழும் இந்தியர் பலர் இன்னும் சில விஷயங்களை புரிந்து கொள்ளவில்லை. கறுப்பர்களுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்ற புரட்சி வெடித்த பின், 1964ல் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம் தான் நம்மவர்சுலபமாக அமெரிக்காவில் நுழைய வழி வகுத்துக் கொடுத்தது.ஆனால், அமெரிக்க வாழ் இந்தியர்கள், ரான்டி கிங் வழக்கை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அமெரிக்காவில் வாழும் ஆப்ரிக்க கறுப்பர் இனத்தவரை நம்மவர்கள் மதிப்பதே இல்லை. அவர்களது பூர்வீகம், கலாச்சாரம் பற்றி அக்கறை கொள்வதில்லை. அவர்களைவிட நம் மக்கள், “மைனாரிட்டி”தான். நம்மவர்கள் நடத்தும் வியாபாரங்களின் முக்கியமான வாடிக்கையாளர்களே கறுப்பர்கள் தான்.
கடந்த 1960க்கு முன், அமெரிக்காவுக்கு வந்த இந்தியர்கள் பெரும்பாலும், டாக்டர்கள், இன்ஜினியர்கள், ஆடிட்டர்கள் தான். இவர்கள் நகரின் மத்திய பகுதியில் வெள்ளையர் நடுவே வேலை பார்த்து, வேலை முடிந்ததும், வெள்ளைத் தோலர்கள் வாழும் இடங்களில் வீடு தேடி, வசிக்கின்றனர். இவை, நகரில் இருந்து, 40-50 கி.மீ., தொலைவில் உள்ள குடியிருப்புப் பகுதிகள். இவர்கள் மாலை, 7 மணிக்கு மேல் வெளியில் வருவது கிடையாது. மிகவும் பாதுகாப்பான வாழ்விற்கு பழக்கப்பட்டுப் போய் விட்டனர். ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்கள் டாக்சி டிரைவர்களாகவும், பெட்ரோல் பங்குகளிலும், ஓட்டல் சர்வர்களாகவும், சிறு பெட்டிக்கடைகள் நடத்துபவர்களாகவும் உள்ளனர்.எனவே, இவர்கள் நகரிலேயே வாழ வேண்டி உள்ளது. அதுவும், வேலை செய்வதிலும் விருப்பம் இல்லாத, குடியிலேயே பொழுதைப் போக்கும் கறுப்பர்கள், ஸ்பானியர்கள் இடையே வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நம்மவர்கள் நேரத்தைப் பற்றி கவலைப்படாமல், தினமும் 18 மணி நேரம் கூட உழைத்து முன்னேறி, நல்ல நிலையை குறுகிய காலத்தில் எட்டுவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. இதனால், அவர்களுக்கு ஆத்திரம் உண்டாகிறது. அமெரிக்க அரசின், சிவில் ரைட்ஸ் கமிஷன், “கடந்த ஆறு ஏழு வருடங்களாக, இந்தியர்கள் மீது வெறுப்பு அதிகரித்து வருகிறது!” எனக் கூறியுள்ளது. அந்த அறிக்கை மேலும் கூறுகிறது: ஏழை பாழை கறுப்பர்கள் வாழும் பகுதிகளில் தான் இந்தியர்களால் குறைந்த செலவில் கடைகள் ஆரம்பிக்க முடிகிறது. இவர்களது கடும் உழைப்பு, குறுகிய காலத்திலேயே பலன் தர ஆரம்பித்ததும், கடையைச் சுற்றி வாழும் ஏழை கறுப்பர்கள் பொறாமைப்பட ஆரம்பிக்கின்றனர். மேலும், அக்கம் பக்கம் வாழும் வேலையற்ற கறுப்பர்களுக்கு வேலை கொடுப்பதில்லை. இதுவும், அவர்களிடையே கோபத்தை அதிகப்படுத்தி வருகிறது.
ஆசிய கண்டத்தில் இருந்து அமெரிக்கா வரும் மக்களுக்கு, அமெரிக்க அரசு சலுகைகள் அளிக்கிறதோ என்ற சந்தேகத்தையும் கறுப்பர்களிடையே கிளப்பி விட்டுள்ளது.எங்கிருந்தோ வந்து நம்மிடம் வியாபாரம் செய்து கொழுக்கின்றனர். ஆனால், நமக்கு வேலை தர மறுக்கின்றனரே என்ற எண்ணம் கறுப்பர்களிடையேயும், ஸ்பானியர் மற்றும் ஏழை வெள்ளைத் தோலினரிடையேயும் பரவி வருகிறது. பிழைக்கச் செல்லும் நாடுகளில் எல்லாம் இந்தியர்களுக்கு ஏன் பிரச்னை ஏற்படுகிறது என்று பார்ப்போமா? தாம் பிழைக்கச் செல்லும் நாடுகளின் நல்லது, கெட்டதுகளில் இவர்கள் கலந்து கொள்வதே இல்லை. அந்நாட்டின் தேசிய நீரோட்டத்தில் இவர்கள் கலந்து கொள்ளாததால், அந்நாட்டு மக்களிடையே இந்தியர்களைப் பற்றிய உயர்வான மதிப்பீடு குறைந்து, சுயநலவாதிகளாகப் பார்க்கப்படுகிறோம்.
நம்மவர்கள் செல்லும் நாடுகளில் எல்லாம், நன்கு உழைத்து பெரிய வீடு, கார், தோட்டம் என சம்பாதித்து விடுகின்றனர். இதுவும் பொறாமையை கிளப்பி விடுகிறது. சம்பாதிக்கும் பணம் அனைத்தையும், ஊருக்கு அனுப்பாமல், தாம் வசிக்கும் நாட்டு மக்களுக்கும் செலவு செய்ய வேண்டும். உள்ளூர் மக்களையும் வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும். தீபாவளி, பொங்கல், இந்திய விழா என்று தமக்குள்ளே நடத்திக் கொள்வதை விட்டு, கறுப்பர்களையும், ஏழை – பாழை வெள்ளையனையும் இவ்விழாக்களுக்கு அழைக்க வேண்டும். அதேபோல, அவர்கள் நடத்தும் விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும் – அதற்கு பண உதவி செய்ய வேண்டும். முக்கியமாக, அவர்களது கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். தாம் உண்டு, தம் வேலை உண்டு என்று இந்தியர்கள் இன்னும் சுய நலத்துடன் இருந்தால் பிரச்னைதான் என முடித்தார்.உண்மை தானே…
(அமெரிக்க நண்பர் முடிக்கும் போது, இரண்டாம் ஜாம தூக்கத்தில் ஆடிக் கொண்டிருந்தார் லென்ஸ் மாமா!)
***
ஸ்டார், “டிவி” நிகழ்ச்சிகள், “போர்” எனவும், பல நிகழ்ச்சிகள் புரியவே இல்லை என்றும் பரவலாக பேசிக்கொள்கின்றனர். இது, ஓரளவு உண்மை என்றாலும், பயனுள்ள நிகழ்ச்சிகள் பல இடம் பெறத்தான் செய்கின்றன.
சமீபத்தில் ஸ்டாரில் கண்ட நிகழ்ச்சி, பால் பண்ணை நடத்துவது பற்றியது! ஸ்டார், “டிவி” நிகழ்ச்சியில், சவுதி அரேபியா நாட்டில், “அல்சபா” என்ற ஊரில் உள்ள பால் பண்ணையைப் பற்றி நிகழ்ச்சி, ஒன்று ஒளிபரப்பினர்.நம்மூரில் கடுங்கோடையில், 40 முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். இந்த, “அல்சபா”வில் எப்போதும், 55 டிகிரி செல்சியஸ் வெப்பம்தான்! 55 டிகிரி வெப்பம் என்றால் தண்ணீர் வசதி எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள்.அராபிய ஷேக் ஒருவருக்கு இங்கு பால் பண்ணை வைக்க ஆசை வந்தது. “விபரீத ஆசை… ஐந்து லிட்டர் பால் கூட கிடைக்காதே…” என நீங்களும், “அட போப்பா… பசு உயிரோடு இருக்கிறதே சந்தேகம்!” என உங்களது நண்பரும் பேசிக் கொண்டால் அது தவறு.“ஷேக்”கின் பண்ணையில் வளரும் பசுக்கள் ஒரு நாளுக்கு, 40 முதல் 45 லிட்டர் பால் கறக்கின்றன… அதுவும், 55 டிகிரி சூடு உள்ள சூழ்நிலையில்.இந்த ஸ்டேட்மென்டைக் கேட்டு, “கப்சா…” என நீங்கள் நினைக்கத் தோன்றும் அல்லது “பசுக்களை, “ஏசி” ரூம்களில் ஷேக் வளர்க்கிறார் போல இருக்கு…” என்ற முடிவுக்கு வரத் தோன்றும்.இரண்டுமே இல்லை!அந்தப் பாலைவனத்தில் பல அடி ஆழத்தில், “போர்” போட்டுத் தண்ணீர் எடுக்கிறார். இந்தத் தண்ணீரை, உயர் அழுத்தத்தில், குழாய்கள் மூலம் மாடுகள் கட்டப்பட்டுள்ள கொட்டகைகளுக்கு எடுத்துச் செல்கிறார். குழாய்கள், மேல் கூரையை ஒட்டி கூரையின் உட்புறமாகச் செல்கின்றன. கொட்டகைகளின் நான்கு புறமும் சுவர்கள் கூட இல்லை; மேல் கூரை மட்டும்தான் உள்ளது.உயர் அழுத்தத்தில் வரும் தண்ணீர் கூரையை ஒட்டி ஆங்கிளாக வைத்திருக்கும் பிரமாண்டமான காற்றாடிகளின் மீது பீச்சப்படுகிறது. பீச்சப்படும் தண்ணீர் காற்றாடியின் வேகத்தில் பூ மழை போல பசுக்களின் மீது தொடர்ச்சியாக விழுகிறது. இதனால், கொட்டகையின் உட்புறம் சூடு குறைந்து கொடைக்கானல், ஊட்டி போன்ற தட்ப வெட்பம் ஏற்படுகிறது.பாலைவனத்தில், குறைந்த செலவில் அதிக பால் பெறும், “ஷேக்”கின் திறமையைப் பாராட்டத்தான் வேண்டும்.நம்மூரை போன்ற தட்ப வெட்ப நிலை உள்ள நாடு தான் இஸ்ரேலும்.
இங்கு, 40-50 லிட்டர் கொடுக்கிறது பசுக்கள்.அறிவார்ந்த நம் பால் வளத்துறை அதிகாரிகள், குளிர் நாடுகளுக்கு மாடு பிடிக்க உல்லாசப் பயணம் மேற்கொள்வதை நிறுத்தி, இஸ்ரேலுக்கும், சவுதிக்கும் சென்று தொழில் நுட்பம் கற்று வந்து, இங்கு விவசாயிகளுக்கு இனி உதவுவது நலம்!
Article Source: DINAMALAR
Like this:
Like Loading...