திண்ணை 9.10.2011

 

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ஓமந்தூரில் உள்ள ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். இவருக்குக் குழந்தைகள் இல்லை. இளமைப் பருவத்திலேயே மனைவியை இழந்தும், மறுமணம் செய்து கொள்ளவில்லை. இல்லறத்தில் வாழ்ந்த ஒரு துறவி என்றே சொல்லலாம்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் களுள் ஒருவர், காந்தியடிகளின் வழியில் தவறாது நடந்தவர்.
அவர் வாழ்நாளில் பொய்யே பேசியதில்லை. உண்மை பேசுகிறவன் அரசியல்வாதியாகவும் ஆகலாம் என்பதை மெய்ப்பிடித்துக் காட்டியவர். தவறு செய்கிறவர்கள் யாராயிருந்தாலும், அவரைக் கண்ணெதிரிலேயே கண்டித்துத் திருத்தும் பழக்கம் கொண்டவர். பொய்யர்களை அடியோடு வெறுத்து விடுவார். “அநீதியை எதிர்க்காதவன் ஆண் மகன் அல்ல…” என்பது அவரது வாக்கு. பொறுமையும், சகிப்புத் தன்மையும் கொண்டிருக்கும் அவரால், பிறர் செய்கிற தவறை சகிக்க முடிவதில்லை. இதனால், அவரை சிலர், முன்கோபி எனக் கூறு வதுண்டு.
நம் மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை, 1947ல் ரெட்டியார் ஏற்றுக் கொண்டார். பதவியை ஏற்கும் முன்னே, “ரெட்டியார் பதவி ஏற்க மாட்டார்…” என்ற வதந்தியை உண்டு பண்ணி விட்டனர். பதவி ஏற்ற பிறகு, “ஆங்கிலமே தெரியாதே… என்ன செய்வார்?” என்ற கேள்வியை கிளப்பி விட்டனர். காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த உள் போராட்டத்தின் விளைவால், முதலமைச்சர் பதவி ரெட்டியாருக்கு கிடைத்தது. இதில், காமராஜரின் முயற்சி பாராட்டத்தக்கது.
ஆங்கிலம் அறியாதவர்களால் ஆட்சி நடத்த முடியாது என்று கூறுபவர்கள் வாய் மூடும்படி ஆட்சி நடத்தினார் ஓமந்தூரார்; காரணம், அவரது நேர்மை. கட்சி பற்றாளர்களின் வம்புக்கும், இழுப்புக்கும் கூட இசைந்து கொடுக்கும் தன்மை நேர்மைக்கு வராது.
இப்படிப்பட்ட முதலமைச்சர் ரெட்டியார் மீதும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை, காங்கிரஸ் கட்சியினரே கொண்டு வந்தனர். அதைக் கொண்டு வந்தவர்களில் தங்களுக்கு, “கான்டிராக்ட்” கிடைக்க வில்லை என்பவரும், தங்கள் உறவினருக்கு, “டெபுடி சூப்பிரண்ட் பதவி” கிடைக்கவில்லை என்பவரும் இருந்தனர். இதைக் கண்டதும், ரெட்டியார் பதவியை உதறி எறிந்து வெளியேறினார்.
— “என் நண்பர்” நூலில், கி.ஆ.பெ.விசுவநாதம்.
***

ஒரு கிராமத்தில், 70 ஆண்டுகளுக்கு முன், அரிச்சந்திரன் நாடகம் நடந்தது. நாடகத்தில் அரிச்சந்திரன் மகன் லோகிதாசனை பாம்பு கடித்து, அவன் அழ வேண்டிய கட்டம். மேடையில் புல் பரப்பியிருந்தனர். மேடைக்கு வந்து லோகிதாசனாக நடித்த பையன் திடீரென்று அலற ஆரம்பித்தான். “ஐயோ… என்னை தேள் கொட்டி விட்டது…” என்று கத்தினான்.
திரை மறைவில் இருந்த நாடக வாத்தியார், உடனே கோபமாக, “ஏய்… பாம்பு கடித்து விட்டது என்று சொல்லச் சொன்னால், தேள் கொட்டி விட்டது என சொல்கிறாயே…” என்று கண்டித்தார்.
சிறுவனோ மீண்டும், “இல்லை… தேள்தான் கொட்டி விட்டது…” என்று அழுதான். உடனே அவனை அடிப்பதற்காக மேடைக்கு வந்த வாத்தியார், கீழே தேள் ஒன்று ஓடுவதைக் கண்டார். பிறகுதான் நடந்ததை அறிந்து, தேளை அடித்துவிட்டு, சிறுவனுக்கு மருந்து போட்டனர்.
***
காமராஜர் முதலமைச்சராக இருந்த போது, ஒவ்வொரு நாள் இரவும் படுக்கப் போவதற்கு முன், தன்னைப் பார்க்க வந்த எல்லாரும் போய் விட்டனரா என்று, தன் உதவியாளர் வைரவனிடம் கேட்பார். “போய் விட்டனர்…” என்று சொன்ன பிறகும், இன்னொரு ரவுண்டு போய்ப் பார்த்துவிட்டு வரச் சொல்வார். காரணம் கேட்டதற்கு, “சில பேர் வெட்கப்பட்டுக் கொண்டோ, பயப்பட்டுக் கொண்டோ ஒதுங்கி நின்று விடுவர். கடைசியில் பார்க்க முடியாமலே ஊர் திரும்பி விடுவர். ஏழைகளாக இருப்பர், மறுபடியும் வரவேண்டுமெனில் செலவு செய்ய வேண்டும், பாவம், அதனால் தான்…” என்பார்.
ஒருமுறை வெளியூரிலிருந்து காரில் திரும்பும் போது, தூங்கிக் கொண்டே வந்தார். கார் சைதாப்பேட்டை பாலம் அருகே நின்று கொண்டிருந்தது. டிராபிக் ஜாம், ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் நின்று, போக்குவரத்தை சரிபடுத்திக் கொண்டிருந்தார்.
உடனே காமராஜர், கீழே இறங்கி, அவரும் அந்தப் போலீஸ்காரரோடு சேர்ந்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உதவினார். பின்னர், உடனடியாக சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று, இதுபோன்ற இடங்களில் இன்னொரு போலீஸ் காரரை கூடுதலாக போடும்படி கடிந்து
கொண்டார்.
***

About these ads

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s