படித்ததில் பிடித்தது 25.10.2012

 

எறும்பு ஊருது …

திண்ணைக்கு வந்த குப்பண்ணா, “என்ன, ஒரே பிள்ளையார் எறும்பாக இருக்கிறதே…” என்றபடியே மேல் துண்டால் தூசு தட்டிவிட்டு அமர்ந்தார். “என்னதான் தட்டினாலும் சற்று நேரத்தில் எறும்புக் கூட்டம் வந்து விடுகிறதே…” என்றார், அங்கலாய்ப்புடன் அருகிலிருந்தவர்.
குப்பண்ணா சொன்னார்: எறும்புகளால் தனித்தனியே வாழ முடியாது. அவை ஆயிரக்கணக்கில் ஒன்று சேர்ந்து ஒரே சமூகமாக வசிக்கின்றன. சாரை சாரையாகச் சென்று இரை தேடுகின்றன. தேடிய உணவை தமக்குள் பங்கிட்டு சாப்பிடுகின்றன. ஒரு எறும்பு சமூகத்தில், மூன்று வகை எறும்புகள் உண்டு. ராணி எறும்பு, ஆண் எறும்பு, வேலைக்கார எறும்பு. ஒரு கூட்டில் ஒரு ராணி எறும்புதான் இருக்கும். வேலைக்கார எறும்புகளெல்லாம் பெண் எறும்புகளே. ஆனால், அவை முட்டையிடாது. ராணி மட்டுமே முட்டையிடும். மற்ற எறும்புகளை விட, ராணி எறும்பு உருவத்தில் பெரியது. வேலைக்கார எறும்புகள் தான் அதன் சமூகத்தில் எல்லா வேலைகளையும் பகிர்ந்து செய்கின்றன. சில இரை தேடும்; சில கூட்டில் இருந்து ராணியையும், குஞ்சுகளையும் பாதுகாக்கும். மற்றும் சில, எதிரிகள் உள்ளே நுழையாதபடி கூட்டைப் பாதுகாக்கும்.
வேலைக்கார எறும்புக்கு இரண்டு இரைப்பைகள் உண்டு. ஒரு பையில் தனக்குத் தேவையான உணவை நிறைத்து வைத்துக் கொள்கிறது. மற்றொரு பையில், உணவை நிரப்பி வந்து குஞ்சுகளுக்கு ஊட்டுகிறது. எறும்புகளுக்குத் தாடைகள் உண்டு. சிற்றெறும்பு, நெருப்பெறும்பு, கட்டெறும்பு, நம்மை, தாடைகளால் கடிக்கின்றன. பிள்ளையார் எறும்பு எனப்படும் கறுப்பு எறும்பு மட்டும் கடிக்காது என்றார் குப்பண்ணா.

***

ராஜாஜி vs. மூக்காஜி

கல்கி வார இதழில் ராமாயண காவியத்தை, “சக்கரவர்த்தியின் திருமகன்’”என்ற தலைப்பில் எழுதினார் ராஜாஜி. ஆனால், இந்தத் தொடருக்கு மறுப்பாக, “சக்கரவர்த்தியின் திருமகன்” என்ற தலைப்பில் மு.கருணாநிதி முரசொலியில் ஒரு தொடர் எழுதினார். ராஜாஜியைக் கிண்டல் செய்யும் விதமாக, “மூக்காஜி” என்ற பெயரில் இந்தத் தொடரை எழுதினார் கருணாநிதி.

 

source: Dinamalar.com

திண்ணை 9.10.2011

 

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ஓமந்தூரில் உள்ள ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். இவருக்குக் குழந்தைகள் இல்லை. இளமைப் பருவத்திலேயே மனைவியை இழந்தும், மறுமணம் செய்து கொள்ளவில்லை. இல்லறத்தில் வாழ்ந்த ஒரு துறவி என்றே சொல்லலாம்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் களுள் ஒருவர், காந்தியடிகளின் வழியில் தவறாது நடந்தவர்.
அவர் வாழ்நாளில் பொய்யே பேசியதில்லை. உண்மை பேசுகிறவன் அரசியல்வாதியாகவும் ஆகலாம் என்பதை மெய்ப்பிடித்துக் காட்டியவர். தவறு செய்கிறவர்கள் யாராயிருந்தாலும், அவரைக் கண்ணெதிரிலேயே கண்டித்துத் திருத்தும் பழக்கம் கொண்டவர். பொய்யர்களை அடியோடு வெறுத்து விடுவார். “அநீதியை எதிர்க்காதவன் ஆண் மகன் அல்ல…” என்பது அவரது வாக்கு. பொறுமையும், சகிப்புத் தன்மையும் கொண்டிருக்கும் அவரால், பிறர் செய்கிற தவறை சகிக்க முடிவதில்லை. இதனால், அவரை சிலர், முன்கோபி எனக் கூறு வதுண்டு.
நம் மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை, 1947ல் ரெட்டியார் ஏற்றுக் கொண்டார். பதவியை ஏற்கும் முன்னே, “ரெட்டியார் பதவி ஏற்க மாட்டார்…” என்ற வதந்தியை உண்டு பண்ணி விட்டனர். பதவி ஏற்ற பிறகு, “ஆங்கிலமே தெரியாதே… என்ன செய்வார்?” என்ற கேள்வியை கிளப்பி விட்டனர். காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த உள் போராட்டத்தின் விளைவால், முதலமைச்சர் பதவி ரெட்டியாருக்கு கிடைத்தது. இதில், காமராஜரின் முயற்சி பாராட்டத்தக்கது.
ஆங்கிலம் அறியாதவர்களால் ஆட்சி நடத்த முடியாது என்று கூறுபவர்கள் வாய் மூடும்படி ஆட்சி நடத்தினார் ஓமந்தூரார்; காரணம், அவரது நேர்மை. கட்சி பற்றாளர்களின் வம்புக்கும், இழுப்புக்கும் கூட இசைந்து கொடுக்கும் தன்மை நேர்மைக்கு வராது.
இப்படிப்பட்ட முதலமைச்சர் ரெட்டியார் மீதும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை, காங்கிரஸ் கட்சியினரே கொண்டு வந்தனர். அதைக் கொண்டு வந்தவர்களில் தங்களுக்கு, “கான்டிராக்ட்” கிடைக்க வில்லை என்பவரும், தங்கள் உறவினருக்கு, “டெபுடி சூப்பிரண்ட் பதவி” கிடைக்கவில்லை என்பவரும் இருந்தனர். இதைக் கண்டதும், ரெட்டியார் பதவியை உதறி எறிந்து வெளியேறினார்.
— “என் நண்பர்” நூலில், கி.ஆ.பெ.விசுவநாதம்.
***

ஒரு கிராமத்தில், 70 ஆண்டுகளுக்கு முன், அரிச்சந்திரன் நாடகம் நடந்தது. நாடகத்தில் அரிச்சந்திரன் மகன் லோகிதாசனை பாம்பு கடித்து, அவன் அழ வேண்டிய கட்டம். மேடையில் புல் பரப்பியிருந்தனர். மேடைக்கு வந்து லோகிதாசனாக நடித்த பையன் திடீரென்று அலற ஆரம்பித்தான். “ஐயோ… என்னை தேள் கொட்டி விட்டது…” என்று கத்தினான்.
திரை மறைவில் இருந்த நாடக வாத்தியார், உடனே கோபமாக, “ஏய்… பாம்பு கடித்து விட்டது என்று சொல்லச் சொன்னால், தேள் கொட்டி விட்டது என சொல்கிறாயே…” என்று கண்டித்தார்.
சிறுவனோ மீண்டும், “இல்லை… தேள்தான் கொட்டி விட்டது…” என்று அழுதான். உடனே அவனை அடிப்பதற்காக மேடைக்கு வந்த வாத்தியார், கீழே தேள் ஒன்று ஓடுவதைக் கண்டார். பிறகுதான் நடந்ததை அறிந்து, தேளை அடித்துவிட்டு, சிறுவனுக்கு மருந்து போட்டனர்.
***
காமராஜர் முதலமைச்சராக இருந்த போது, ஒவ்வொரு நாள் இரவும் படுக்கப் போவதற்கு முன், தன்னைப் பார்க்க வந்த எல்லாரும் போய் விட்டனரா என்று, தன் உதவியாளர் வைரவனிடம் கேட்பார். “போய் விட்டனர்…” என்று சொன்ன பிறகும், இன்னொரு ரவுண்டு போய்ப் பார்த்துவிட்டு வரச் சொல்வார். காரணம் கேட்டதற்கு, “சில பேர் வெட்கப்பட்டுக் கொண்டோ, பயப்பட்டுக் கொண்டோ ஒதுங்கி நின்று விடுவர். கடைசியில் பார்க்க முடியாமலே ஊர் திரும்பி விடுவர். ஏழைகளாக இருப்பர், மறுபடியும் வரவேண்டுமெனில் செலவு செய்ய வேண்டும், பாவம், அதனால் தான்…” என்பார்.
ஒருமுறை வெளியூரிலிருந்து காரில் திரும்பும் போது, தூங்கிக் கொண்டே வந்தார். கார் சைதாப்பேட்டை பாலம் அருகே நின்று கொண்டிருந்தது. டிராபிக் ஜாம், ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் நின்று, போக்குவரத்தை சரிபடுத்திக் கொண்டிருந்தார்.
உடனே காமராஜர், கீழே இறங்கி, அவரும் அந்தப் போலீஸ்காரரோடு சேர்ந்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உதவினார். பின்னர், உடனடியாக சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று, இதுபோன்ற இடங்களில் இன்னொரு போலீஸ் காரரை கூடுதலாக போடும்படி கடிந்து
கொண்டார்.
***

பார்த்தது..கேட்டது..படித்தது 9.10.2011

 

இயற்கைக்கு எதிராக மனிதன் செயல்படும் போது, அது, அவனுக்கு, “பொட்” என்று தலையில் குட்டியது போன்ற பாடம் கற்பிக்கிறது – ஒவ்வொரு முறையும்… ஆனாலும், இவன் திருந்துவதில்லை!
இப்படித்தான் நடந்தது இங்கிலாந்தில்… இங்கிலாந்து நாட்டு பசுமாடுகளை, “டிவி”களில் பார்த்து இருப்பீர்கள்… கொழு, கொழுவென இருக்கும்; 30-40 லிட்டர் பால் கொடுக்கும். இதற்கும் அதிகமாக பால் வேண்டும் என பேராசைப்பட்டனர்.
இதற்கென ஆராய்ந்து, விசே ஷ உணவு தயாரித்தனர். சாக பட்சிணியான மாட்டுக்கு, மாட்டு எலும்புத் தூள் கலந்த உணவைக் கொடுத்தனர்… பால் மற்றும் இறைச்சி அதிகமாகத்தான் கிடைத்தது. ஆனால், ஒரு கட்டத்தில் மாடுகளுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. இதை, “மேட் கவ் டிசீஸ்” என்றனர்.
இந்த நோய் பீடித்த மாடுகளை, சில ஆண்டுகளுக்கு முன் லட்சக்கணக்கில் கொன்று எரித்தனர்.
இங்கிலாந்தையும், பிரான்ஸ் நாட்டையும் ஆட்டிப் படைப்பது, “கா-வா” நோய் எனப்படும், “புட் அண்ட் மவுத்” நோய். நம் நாட்டில், இந்த நோய் கண்ட மாடுகளை தனியே பிரித்து, விளக்கெண்ணெயும், மஞ்சளும் தடவி வருவர்… இந்த நோய் கண்ட மாடுகள், உணவு எடுத்துக் கொள்ளாது… அதனால், மூங்கிலை வாயில் நுழைத்து, அரிசிக் கஞ்சி ஊற்றுவர். பத்து நாளில் நோய் ஓடிப் போகும்.
ஆனால், இங்கிலாந்திலோ, இந்நோய் கண்ட, மாடு – ஆடுகள், ஒன்றல்ல, இரண்டல்ல… ஏழு லட்சத்தை கொன்று குவித்துள்ளனர்.
நினைத்தே பார்க்க முடியவில்லை… இதென்ன சோகம்…
இந்த நேரத்தில், கோவை பாரதியார் பல்கலைக் கழக, உளவியல் துறை பேராசிரியர் வேதகிரி
கணேசன் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றை படிக்க நேர்ந்தது… அவர் கூறுகிறார்…
மதங்கள் சொல்வதெல்லாம், மனித நேயத்துடன் மனிதர்கள் செயல்பட வேண்டும் என்பதே. ஆனால், தங்கள் சுயநலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதையே மனிதர்கள் விரும்புகின்றனர்; அவர்களுக்கு, தங்களது சுயநலத்திற்கு எதிரானதாக மனிதநேயம் தோன்றுகிறது.
பெரும்பான்மையினர், பெயருக்கு தங்கள் தாய், தந்தையரின் மதத்தைப் பின்பற்றுவதாகக் கூறுகின்றனர்; இன்னும் சிலர், மதமாற்றம் செய்கின்றனர்.
ஆனால், அநேகமாக எல்லாருமே மதங்கள் கூறுவதைப் பின்பற்றுவதில்லை…
உதாரணமாக, உணவுப் பழக்கத்தை எடுத்துக் கொள்ளலாம்… இந்தியா முழுவதும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் சைவ உணவையே சாப்பிட்டதாக யுவான் சுவாங் என்ற சீன அறிஞர், இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்தபோது, பார்த்து எழுதியுள்ளார்.
சமூகத்தால் ஒதுக்கப்பட்ட குற்றவாளிகள் ஊரை விட்டுத் துரத்தப்பட்டு காடுகளில் வாழ்ந்தனர். “சண்டாளர்கள்” என்று கூறப்பட்ட இந்த மதத்தைச் சேர்ந்த இவர்கள் மட்டுமே வேறு வழியின்றி காடுகளில் வாழும் போது புலால் உணவை உண்டு வந்தனர்.
ஆனால், தற்போது இந்து மதத்தினரில் பெரும்பாலோர் மாமிச உணவு சாப்பிடும் பழக்கத்தில் சிக்கி விட்டனர்; அதை, கவுரவமானதாகவும் கருதுகின்றனர்.
“புலால் மறுத்தல்” என்ற ஒரு அதிகாரத்தில், 10 குறள்கள் மூலம் மாமிச உணவை மறுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார் திருவள்ளுவர்.
அவர், மாமிச உணவை உண்பவர் உள்ளவரையில், அதை விற்பவர்கள் இருப்பர் என்று கூறியுள்ளார்.
விற்பவர்கள் உள்ளவரை, வளர்ப்பவர்கள் இருப்பர்; வளர்ப்பவர் உள்ளவரை, மேய்ப்பவர்கள் இருப்பர்; மேய்ப்பவர் உள்ளவரை பூமியின் மேற்பரப்பிலுள்ள பச்சை பசேலென்ற பாதுகாப்புக் கவசம் தேய்வடையும்.
அதனால், சூரிய கதிர்வீச்சுப் பட்டு நிலபரப்பு பாலைவனமாகும். நிலத்தடி நீர் கீழே இறங்கி, நீர்வளம் வற்றிப் போகும்.
ஒரு கிலோ மாமிசம் ஒருவர் உண்ணும் போது, அது, பல கிலோ பசுமையான தாவர இலைகளால் ஆனது என்பதை உணர்வதில்லை; பூமியின் பசுமைப் பாதுகாப்பு கேடயம் அரிக்கப்படுவதற்கு, தான் காரணமாவதை உணர்வதில்லை.
“உயிர்களைக் கொன்று மாமிச உணவைச் சாப்பிடக் கூடாது…” என்று கூறினார் புத்தர். ஆனால், இன்று மாமிச உணவைச் சாப்பிடுகின்றனர் புத்த பிட்சுகள். ஏனென்று கேட்டால், “நாங்கள் மாமிசத்திற்காக உயிர் வதை செய்வதில்லை; மாமிசத்தைக் கடையில் வாங்குகிறோம்…” என்கின்றனர்.
அசைவ உணவை இயேசுநாதர் உண்டதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.
சைவ உணவையே உண்டு வந்தார் முகமது நபி. குர்-ஆனில், “அல்பகறர் (பசு)” என்ற முதல் அத்தியாயத்தில், “அல்லாஹ் (இறைவன்) மரங்களைப் படைத்தேன். ஏனென்றால், அவை உங்களுக்கு (மக்களுக்கு) நல்ல (ஹலால்) உணவாகும் என்பதற்காக…” என்று கூறியதாக குறிப்பிடுகிறார் நபிகள் நாயகம்.
மேலும், இறைவன், “பசுக்களை (பால் கொடுக்கும் மிருகங்களை – ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவை) படைத்தேன். அவற்றில் ரத்தத்திற்கும், சாணத்திற்கும் இடையில் பாலைப் படைத்தேன். ஏனென்றால், அது உங்களுக்கு நல்ல (ஹலால்) உணவாகும் என்பதற்காக…” என்று குறிப்பிடுகிறார்.
“உணவாகும்” (மாமிசம்) என்பதற்காக என்று குறிப்பிடவில்லை.
சொர்க்கத்தில் பாலும், பழங்களும், தேனும் கிடைக்கும் என்று கூறுகிறார் இறைவன். இதன் மூலம், அவற்றின் சிறப்பை அறியலாம். தடை செய்யப்பட்ட உணவு என்று ரத்தத்தை கூறுகிறார் இறைவன்.
மாமிசத்திலிருந்து ரத்தத்தை முழுமையாக நீக்க முடியுமா?
ஜைன மதத்தினரும், உயிர் வதையையும், மாமிச உணவையும் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். புத்த மதத்தைப் பின்பற்றும் சீனர்களும், ஜப்பானியர்களும் சைவ உணவை பின்பற்ற இயலாமல், மதக் கொள்கைகளுக்கு முரணான உணவுப் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
சைவ உணவுப் பழக்கத்தை பின்பற்றாத வரையில், மக்களிடம் பிற உயிரினங்களிடமும் அகிம்சை முறையைப் பின்பற்றாத வரையில், இந்துக்களோ, பவுத்த மதத்தினரோ, கிறிஸ்தவர்களோ, இஸ்லாமியரோ, யூதர்களோ, ஜைன மதத்தினரோ தங்கள் மதக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதாக ஏற்றுக் கொள்ள முடியாது.
பெரும்பாலும், மாமிச உணவை உண்டு வந்த, இந்த உலகையே ஒரு காலத்தில் ஆண்டு வந்த மேலை நாட்டினர், நூற்றுக்கு, 40 பேர் சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறி விட்டனர்.
இதற்கு மதம் காரணமல்ல; மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் மூலம், மாமிச உணவு இதய நோயை உருவாக்கும் என்ற காரணத்தால்தான்.
இதிலிருந்து, சிந்தனைப் பூர்வமாக செயல்படும்போது, தங்கள் செயல்களை மனிதர்கள் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் என்று உறுதியாகிறது.
எந்த மதமும் சிந்திக்காமல் செயல்படச் சொல்லவில்லை.
மதங்களைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்பவர்கள், அறிவுபூர்வமாகச் சிந்திக்க மறுக்கின்றனர். ஏனென்றால், தங்களது சொந்த ஆசாபாசங்களுக்கு முதலிடம் கொடுக்கும் போது, மதக் கோட்பாடுகளும், கருத்துகளும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.
— இப்படி எழுதியுள்ளார்.
எந்த மதமுமே, ஒரு உயிரைக் கொன்று தின்னச் சொல்லவில்லை. விஞ்ஞானப் பூர்வமாகவும் அசைவம் நல்லதல்ல என தெரிய வந்துள்ளது.
உணவுக்காக கால்நடைகளை வளர்ப்பதும், அதற்கு வியாதிகளை வரவழைத்து, பின்னர் லட்சக்கணக்கில் கொல்வதும், என்று முடிவுக்கு வருமோ?

***

Article Source: DINAMALAR

திண்ணை 14.8.2011


தாஜ்மகால், உன்னதமான காதல் கோவில் எனத் தெரியும். அதன் அஸ்திவாரம், கிணறுகள் போன்ற அமைப்பின் மீது, உறுதியான பாறைகளின் மேல் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை, இதற்கென்றே
விசே ஷமாகத் தயாரிக்கப்பட்ட மர உத்திரங்கள், தாங்கிக் கொண்டிருக்கின்றன. அஸ்திவாரக் கற்களை, இந்த மர உத்திரங்கள் இணைக்கின்றன. இந்த மர உத்திரங்களை, தாமிரத் தகடுகளால் ஒன்றோடொன்று பொருத்தியுள்ளனர்.
இப்படியொரு நூதனமான அஸ்திவாரம், தாஜ்மகாலைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. இவ் வாறு அஸ்திவாரம் அமைக்கப்பட்டதற்குக் காரணம் என்ன? அதிர்ச்சி ஏதாவது ஏற்பட்டால், கட்டடத்திற்கு சேதம் வராமல், இந்த அஸ்திவாரம், அந்த அதிர்ச்சிகளைத் தாங்கிக் கொள்ளும். பூகம்பங்கள் ஏற்பட்டால் கூட, கட்டடம் அங்கு மிங்கும் ஆடுமே தவிர, இடிந்து விழுந்து விடாது.
“உலக அதிசயங்கள்” நூலிலிருந்து…

***

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், சினிமாவில் நடிகராக ஆக வேண்டும் என்ற ஆசையில்தான் சென்னை வந்தார். கீழ்பாக்கத்தில் இருந்த ஜூபிடர் பிக்சர்ஸ், கண்ணகி படம் துவங்கியிருந்த வேளை. ஹீரோ – பி.யூ.சின்னப்பா. ஹீரோயின் -பி.கண்ணாம்பா. இதில், எம்.எஸ்.வி.,க்கு பால கோவலன் வேடம் கொடுக்கப்பட்டது. பால கண்ணகியாக, பிரபல பின்னணிப் பாடகி, டி.வி.ரத்தினம் நடிக்க, படப்பிடிப்பு நடந்தது. மறுநாள், “ரஷ்” (எடுத்தவரை படத்தைத் திரையிட்டு) பார்த்து, “அந்தப் பெண்ணுக்குத் தம்பி மாதிரி இருக்கிறாய்…” என்று கூறி, எம்.எஸ்.வி.,யை நீக்கி விட்டனர்.
“அக்கா மாதிரி வயது அதிகமாய் தெரிந்த பெண்ணை கேன்சல் பண்ணலை; தம்பி மாதிரி இருக்கேன்னு என்னைக் கேன்சல் பண்ணி விட்டனரே…” என்று புலம்பினார் எம்.எஸ்.வி., பின்னர், ஜூபிடர் பிக்சர்ஸ் கோவையில் ஸ்டுடியோ அமைத்த போது, எம்.எஸ்.வி., அங்கு போய், “புரொடக்ஷன் பாயாக, வருபவர்களுக்கு காபி, டீ, டிபன் கொடுக்கும் வேலை பார்த்து வந்தார். அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி, எம்.என்.நம்பியார், எம்.ஜி.சக்ரபாணி ஆகியோர் தங்கியிருந்த லாட்ஜிலேயே எம்.எஸ்.வி.,யும் தங்கிக் கொண்டார். சம்பளம் மாதம், இருபது ரூபாய்.
பின்னர் சுப்பையா நாயுடு, சுப்பராமன் ஆகிய இசையமைப்பாளர்களிடம் சேர்ந்து, தொழில் கற்றுக் கொண்டார். முதல் முதலாக ஜெனோவா படத்திற்கு இசை அமைப்பாளரானார். படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆருக்கு, இது பிடிக்கவில்லை. “ஜூபிடர் ஆபீசில் காபி, டீ கொடுத்து, ஆபீஸ் பாயாக இருந்தவனுக்கு, மியூசிக் பத்தி என்ன தெரியும்…” என்றார் எம்.ஜி.ஆர்., ஆனால், தயாரிப்பாளர் உறுதியாக இருந்தார்.
படத்தின் பாடல்கள் அனைத்தையும், “ஹிட்” செய்தார் எம்.எஸ்.வி., பிற்காலத்தில் எம்.ஜி.ஆர்., படங்களின் வெற்றிகளுக்கு எம்.எஸ்.வி., இசை யமைத்த பாடல்களே பெரும் பங்கு வகித்தன. விதியின் விளையாட்டு!

***

அமெரிக்காவில், உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த சமயம். அப்போது, அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன், தன்னுடைய ராணுவத் தளபதி ஒருவர், போர் முனைச் செய்திகளை உடனுக்குடன் அனுப்புவதில்லை என்று கோபப்பட்டு, அவருக்குக் கடுமையான கடிதம் ஒன்று எழுதினார்.
ஆத்திரமடைந்த ராணுவத் தளபதி, “ஆறு பசு மாடுகளைக் கைப்பற்றியிருக் கிறோம். அவற்றை, என்ன செய்வது என்ற உத்தரவுக்காகக் காத்திருக் கிறோம்…” என்று குறிப்பிட்டார். தன்னுடைய எரிச்சலைக் காட்டுவதற்காகவே, அந்தத் தளபதி இவ்வாறு தந்தி கொடுத்தார்.
லிங்கன் கோபப்படவில்லை. கீழ்கண்டவாறு பதில் தந்தி கொடுத்தார். “ஆறு பசு மாடுகளைப் பிடித்த உங்களுடைய தீரச் செயலைப் பாராட்டுகிறேன். அவற்றை என்ன செய்வது என.

 

Article Source: DINAMALAR

பார்த்தது..கேட்டது..படித்தது 14.8.2011

 

நண்பர் ஒருவரை வரவேற்க, சென்னை திரிசூலம் பன்னாட்டு விமான வருகை தளத்தில் காத்திருந்தோம். அதிகாலை, 4:00 மணிக்கு லண்டனிலிருந்து, நேரடியாக சென்னை வரும், “பிரிட்டிஷ் ஏர்வேஸ்” விமானம் அது. முதல் நாள் இரவு, உ.பா., சாப்பிட்டு, உணவு ஏதும் எடுக்காமல், லென்ஸ் மாமா படுத்து விட்டார் போலும்… “மணி… பசிக்கிதுப்பா… பசிக்கிதுப்பா…” என, “தொணத்தி” கொண்டே இருந்தார்.
சுற்று முற்றும் பார்த்தேன்… காபி – டீ கடை ஒன்று மட்டும் தான் திறந்து இருந்தது… கொஞ்ச தூரம் நடந்ததும், “அடையார் ஆனந்த பவனின்” விமான நிலையக் கிளைக் கடையை சாவகாசமாகத் திறந்து கொண்டிருந்தார் ஊழியர் ஒருவர்…
திராட்சைப் பழம் போல, ரோஸ் கலரில், கொஞ்சம் ஜீராவில் ஊறி கொண்டிருந்த இனிப்பு ஒன்றைக் காட்டி, பெண்மணி ஒருவர், தன் கணவரிடம் தெலுங்கில் மாட்லாடிக் கொண்டிருந்தார்… உடனே கணவர், தெலுங்கு கலந்த தமிழில், இரண்டு கிலோ இனிப்புக்கு, “ஆர்டர்” கொடுத்தார்…
“அட… தேவுடா… இந்த அதிகாலை வேளையில் ஸ்வீட்டா?” என, எனக்குத் தெரிந்த தெலுங்கில் நினைத்துக் கொண்டு, லென்ஸ் மாமாவை அழைத்து வரச் சென்றேன்… கொஞ்சம் மிக்சரோ, காரச் சேவோ வாங்கி, அத்துடன் காபி சாப்பிட்டால், அவரின் பசி அடங்குமே என்ற எண்ணத்தில்…
அகோரப் பசியில் இருந்த மாமா, நூறு கிராம் மிக்சர் வாங்கியதுமே, பட, படவென வாய்க்குள் கொட்ட ஆரம்பித்தார்… அவரின் கையை, “லபக்” எனப் பிடித்த குப்பண்ணா, “ஓய்… கையை அலம்பினீரா? எந்தப் பொருளை சாப்பிடுமுன்னும் பொது விதிகள் சிலது இருக்கு. தெரியாதா உமக்கு?” என வினா எழுப்பினார்… அதற்கு பதில் சொல்லும் பொறுமை எல்லாம் இல்லை மாமாவிடம்… காரியத்திலேயே கண்ணாய் இருந்து, மிக்சரை, “அரை”த்துக் கொண்டிருந்தார்.
குப்பண்ணாவை தனியே அழைத்துச் சென்று, “அந்தப் பொது விதிகளை எங்கிட்டே சொல்லுங்களேன்… நான் எழுதி, நாலு வாசகர்களாவது அதைப் பின்பற்றுவர்… நல்லது நடக்கட்டுமே…” என்றேன்.
பேஷா சொல்றேன் அம்பி… கேட்டுக்கோ… இது, “ஆச்சாரக் கோவை”யில சொல்லப்பட்டது… என்னோட கற்பனைன்னு நெனைச்சுண்டுடாதே…” என்றவர், சிறிய இடைவெளி விட்டு ஆரம்பித்தார்…
சாப்பிடறதுக்கு முன்னே, கை, கால் அலம்பி, வாய் கொப்பளிக்கணும்… உடனே, காலையும் கழுவணும்… காலை கழுவிய ஈரத்துடனே சாப்பிட உக்காரணும்… அப்பறம், சாப்பிடப் போற இலையோ அல்லது தட்டையோ சுற்றி நீர் தெளிக்கணும்… இது, எறும்பு அல்லது ஈ அங்கே அண்டாமல் இருக்கறதுக்கு!
இப்போ, “புபே”ன்னு நாகரிகமா, அவாளே எடுத்து போட்டுண்டு, நின்னோ, நடந்தோ சாப்பிடுறாளே… அது தப்பு! “புபே”ன்னாலும், எடுத்துப் போட்டுண்டு, எங்கேயாவது உக்காந்துண்டு தான் போஜனம் பண்ணணும்! சாப்பிடும் போது பேசிண்டே இருக்கப் படாது!
சாப்பிடறது கிழக்குப் பக்கமாவோ, வடக்குப் பக்கமாவோ இருக்கணும்! தெற்கு, மேற்கு திசைகளைப் பார்த்து சாப்பிடறதை கண்டிப்பா, “அவாய்ட்” பண்ணிடனும்…கல்யாணப் பந்தியிலோ அல்லது வேறு விசேஷ பந்தியிலோ அமர்ந்து சாப்பிடும் போது, நம்மை விட மூத்தோர் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடப்படாது… ஒரு வேளை, அப்படி அமைஞ்சுட்டுதுன்னா, அவா சாப்பிட ஆரம்பிக்கு முன்னே நாம் சாப்பிடப்படாது; அது போலவே, அவா சாப்பிட்டு எழுந்திருக்கு முன்னே நாம் எழுந்திருக்கப் படாது!
பொதுவா, மூத்தவா சாப்பிட்டப்பறம், இளையவா சாப்பிடறது தான் நல்லது…
“முதல்ல பாயசம் அல்லது பூந்தி போன்ற இனிப்பு வகைகளையும், மத்த, “ஐட்டங்களை” இடையிலும், கடைசியில் கசப்பு உணவுகளையும் சாப்பிடணும்… சில பேர் மோர் சாதம் சாப்பிட்டப்பறம் பாயசம் சாப்பிடுவா… அது ரொம்பக் கெடுதி தெரிஞ்சுக்கோ!
சாப்பிட்டப்பறம் நன்னா வாய் கொப்பளிச்சுட்டு, கால் அலம்பின ஈரம் காயர வரை நன்னா நடந்துட்டுத் தான் ராத்திரியில படுக்கைக்குப் போகணும்!
விருந்தாளிகள், மூத்தோர், குழந்தைகள், பசு, பறவைகளுக்கு உணவு அளித்த பிறகு தான், இளையோர் சாப்பிட வேண்டும்!
சாப்பிட்ட பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீர் டம்பளரையோ, குவளையையோ ரெண்டு கையிலும் பிடிச்சுண்டு குடிக்கப்படாது… பெரியோருக்கு ஏதாவது ஒன்றைத் தரும் போதோ அல்லது பெறும் போதோ மட்டுமே இரு கைகளாலும் செய்யணும். என, மிக நீண்ட, “லெக்சர்” கொடுத்து முடித்தார்…
மிக்சர் சாப்பிட்டு, காபியும் குடித்து, வெண்குழல் வத்தியை கார் பார்க்கிங் இருட்டு நிழலில் ஊதிக் கொண்டிருந்தார் லென்ஸ் மாமா… விமான நிலையம் பொது இடமாயிற்றே… பொது இடங்களில் புகைபிடித்தால் போலீஸ் புடிச்சுக்குமே!

***

லென்ஸ் மாமாவிற்கு ரத்தத்தில் கொழுப்பு சத்து கூடி விட்டது. “தினமும், 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை நடைப்பயிற்சி மேற்கொண்டே ஆக வேண்டும்!” என, மருத்துவர் அறிவுறுத்தியதால், அதை செய்கிறார்.
“நல்ல விஷயம் தானே!” என நீங்கள் எண்ணலாம்… ஆனால், தொல்லை என்னையல்லவா பிடித்துக் கொண்டது. அதிகாலை, 4:30 மணிக்கு என் இருப்பிடம் வந்து, “பீம்… பீம்” என ஹாரன் அடித்து, என்னை எழுப்பி, தன்னுடன் நடைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்று விடுகிறார். தூக்கம் கலையாமல், அரைக் கண் விழித்த நிலையிலேயே நடந்து செல்லும் போது கண்ட காட்சிகள்…
* கை இல்லாத பனியனும், டிராக் சூட்டும் அணிந்து, தலை முடியை போனி டெயில் ஸ்டைலில் கட்டி, இளம் பெண்கள் ஏன் குதித்து, குதித்து ஓடுகின்றனர்? அப்படி ஓடும் போது, அவர்களின் அங்க அசைவுகள் ஆபாசமாக தெரிவதுடன், சபலிஸ்ட் ஆண்களின் மனதை பதறவும் வைக்கின்றனரே… இது ஏன்?
*நடுத்தர வயது பெண்கள் ஓடுவதில்லை. அதற்கு பதில், “மென் குதி நடை” பயில்கின்றனர். அவர்களும் தம் மீது துப்பட்டா போடாமல், மிகுந்த லோ கட் டாப்ஸ் அணிந்து செல்லும் போது, கால் மணி நேர நடையிலேயே வேர்த்து, விறுவிறுத்து உடலோடு ஒட்டிக் கொண்ட சுரிதார் டாப்ஸ், அங்கங்களின் வளைவு, நெளிவுகளை
அப்படியே வெளிச்சம் போட்டு காட்டுவது இவர்களுக்கு தெரிவதில்லையே… ஏன்?
* டூ – வீலர் ஓட்டும் சென்னைப் பெண்கள், 90 சதவீதம் பேரும் தம் சுரிதார் டாப்சில் உள்ள சைடு கட்டிங்கை இடுப்பு வரை வெட்டி, தைசையும், கால் மசில் அழகையும் வெளிச்சம் போடுவது ஏன்?
— இது போன்ற உடைகள் பெண்களுக்கு வசதி என்பதால், இப்படி அணிகின்றனரா? மண் தின்னப் போகும் உடம்பை மனிதர்கள் பார்த்து ரசிக்கட்டுமே என்ற தாராள மனப்பான்மையுடன் இருக்கின்றனரா?

***

Article Source: DINAMALAR