கம்ப்யூட்டர் சாப்ட்வேர் துறையும், கால் சென்டர்களும் சென்னையிலும், சென்னையைச் சுற்றியும் பெருகி விட்டதால், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் வாழ்க்கை முறையும் மாறி விட்டது; வாழ்க்கைத் தரமும் மாறி விட்டது.சமீபத்தில் ஒரு நாள், முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள சென்னை வந்திருந்தார் வெளியூர் நண்பர் ஒருவர். என் உதவியை நாடினார். தி.நகரில் உள்ள ஒரு பரிசோதனைக் கூடத்தில் அவருக்கு, “அப்பாயின்மென்ட்’ வாங்கிக் கொடுத்திருந்தேன். வெறும் வயிற்றுடன் மறுநாள் காலை வரச் சொல்லி இருந்தனர்.தனியே போக அச்சப்பட்ட நண்பர், என்னையும் அழைத்தார். காலை நேரத்தில் அந்த பரிசோதனைக் கூடத்தின் வெளி வாயிலை ஒட்டி வண்டியை நிறுத்தி இறங்கவும், என் வண்டிக்கு பின்னால், ஐந்து புது மாருதி கார்கள், “சர்… சர்’ என வேகமாக வந்து நின்றன.ஒவ்வொரு காரிலிருந்தும் ஒரு இளம் பெண் இறங்கினர்! அனைவருமே 23–25 வயதுக்குட்பட்டவர்கள்.புரிந்து போனது… அவர்கள் அனைவரும் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் என்பது! அந்த நிறுவனத்தினர் உடல் பரிசோதனைக்காக இப்பெண்களை அனுப்பியுள்ளனர் என்பதையும் அனுமானிக்க முடிந்தது.சாப்ட்வேர் நிறுவனங்கள், இரண்டு வருட அனுபவம் உள்ள, “கேன்டிடேட்’களுக்கு மாதம் 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்குகின்றன… இவ்வளவு சின்ன வயதில் இவ்ளோ பணத்தை வைத்து என்ன செய்வர்?உடனே புது மாருதி கார் வாங்க வேண்டியது தான்! மாதத் தவணைத் தொகையாக நிதி நிறுவனங்கள், மாருதி கார்களுக்கு குறைந்த பட்ச தவணை தானே கேட்கின்றன… எனவே, 90 சதவீதம் பேர் கார் வாங்கி விடுகின்றனர்!வாழ்க்கைத் தரம் இப்படி உயர்ந்தாலும், வாழ்க்கை முறை தவிடு பொடியாகி விட்டது! இவர்கள் சூரியனைப் பார்ப்பதே அரிதாகி வருகிறது.எப்.எம்., ரேடியோ நிலையத்தில் பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவர், சாப்ட்வேர் துறையில் வேலை கிடைத்து சென்று விட்டார். சமீபத்தில், நம் அலுவலகத்தில் அப்பெண்ணை சந்தித்த போது, “வேலை எப்படி இருக்கும்மா?’ எனக் கேட்டேன்.”வேலை இன்ட்ரஸ்டிங்கா இருக்கு, சவாலா இருக்கு, எதிர்பாராத சம்பளம் மற்றும் அலவன்சுகள் இருக்கு… அருமையான சாப்பாடு குடுக்கறாங்க… ஆனா, வாழ்க்கை முறை மாறிப் போச்சு…”பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்களுக்காகத் தான் சாப்ட்வேர் தயார் பண்றோம்… ஸோ… அவங்களோட தொடர்பு கொள்ள, அங்க பகலா இருக்கும் போது தான் முடியும்… அங்க பகலா இருக்கும் போது, இங்கே இரவு.”எனவே, தினமும் இரவில் தான் வேலை… இரவு வேலை என்றாலும், பெண்களின் பாதுகாப்புக்கெல்லாம் பயம் ஒன்றும் இல்லை. இரவு 2 மணிக்கு முழுச் சாப்பாடு. விடிந்து, வீட்டுக்கு வந்த பிறகு பகல் முழுவதும், ஏன் மாலை வரை கூட தூங்க வேண்டியுள்ளது.”இதனால், சாதாரண மனிதர்கள் செய்யும் எந்த ரொட்டீன் வேலையும், பொழுது போக்கும், உறவினர், நண்பரை காணச் செல்வதும் முடியாமல் போய் விடுகிறது.”சனி, ஞாயிறு தான் விடுமுறை… அந்த நாட்களில் இரவில் தூக்கம் வருவதே இல்லை. இரவு இரண்டு மணிக்கு அகோர பசி எடுக்கிறது. அந்த நேரத்தில் பிரிட்ஜை, கிச்சனைக் குடைந்தால் அம்மா சப்தம் போடுறாங்க.”திங்கள் டு வெள்ளி வரை பசங்க குடிக்கவே மாட்டாங்க… சனிக்கிழமை இரவு சக்கை போடு போடுறாங்க… ஹாஸ்டல்ல தங்கி வேலை பார்க்கும் சாப்ட்வேர் பொண்ணுங்களும், பசங்களோட சேர்ந்து விடிய, விடிய டிஸ்கோ கிளப்புகளில் கும்மாளம் போடுறாங்க… சில பசங்க காரை எடுத்துகிட்டு புதுச்சேரி போயிடறாங்க…”தினம், தினம் ராத்திரியில வேலைக்கு போறப்போ ஒண்ணுமே சொல்லாத அம்மா, ஞாயித்துக்கிழமை சாயங்காலம் வெளியே புறப்பட்டா, “எங்கே போறே?’ன்னு கேக்கறாங்க… இப்படி மாறிப் போச்சு எங்க வாழ்க்கை…’ என நீண்ட விளக்கம் கொடுத்தார்.கடந்த ஞாயிறு நானும், லென்ஸ் மாமாவும் புதுச்சேரி போகும் போது, கிழக்கு கடற்கரை சாலையில் வெவ்வேறு இடங்களில், புத்தம் புது மாருதி கார்கள் நான்கு விபத்துக்குள்ளாகி கிடப்பதைக் கண்டோம்.அப்பெண் சொன்னது போல் சாப்ட்வேர் பையன்கள் செய்த விபத்துக்கள் தான் அவை.இதுவரை, அதாவது, அவர்களது 20–22 வயது வரை பைக் ஓட்டியே பழகியவர்கள் அவர்கள். காரையும் பைக் போலவே நினைத்து, புகுந்து, புகுந்து செல்ல எத்தனிக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளில் வண்டி ஓட்டுவது ஒரு கலை… இவர்கள் கார் டிரைவிங்கிற்கு புதியவர்கள் என்பதால் அக்கலை கைவரப் பெறாதவர்களாக உள்ளனர்.தேசிய நெடுஞ்சாலைகளில் இரவில் கார் ஓட்ட மிகுந்த அனுபவம் தேவை. இவர்கள், பல்வேறு காரணங்களுக்காக இரவில் கார் ஓட்டி மாட்டிக் கொள்கின்றனர். அதுவும் புதுச்சேரியிலிருந்து திரும்பும் போது முழு போதையில், அதீத வேகத்தில் கார் ஓட்டி, விபத்தை சந்திக்கின்றனர்.காருக்கு புதியவர்களான இவர்கள் மூலமாக, கிழக்கு கடற்கரை சாலையில் மற்ற வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து இருப்பதால், சனி ஞாயிறு – அதுவும் இரவில் மேற்படி சாலையை தவிர்ப்பது நல்லது.
source of this article: Dinamalar